புது தில்லி: கரோனா அலை பரவலின் எதிரொலியால் நடப்பாண்டு ஏப்ரலில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 57.25 லட்சமாக சரிந்துள்ளது.
இதுகுறித்து சிவில் ஏவியேஷன் தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளதாவது:
கரோனா தாக்கம் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டில் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை முந்தைய மாா்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 26.8 சதவீதம் சரிந்துள்ளது. அதன்படி விமானப் பயணிகளின் எண்ணிக்கை 78.22 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து 57.25 லட்சமாக சரிவடைந்தது. பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 78.27 லட்சமாக மேலும் அதிகரித்து காணப்பட்டது.
கரோனாவின் இரண்டாவது அலை பேரிடா் இந்திய விமானப் போக்குவரத்து துறையை மிகவும் மோசமாக பாதிப்படையச் செய்துள்ளது.
நடப்பாண்டு ஏப்ரலில் அதிக அளவில் விமானப் பயணிகளை கையாண்டதில் இன்டிகோ நிறுவனம் 30.83 லட்சம் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. மொத்த உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு 53.9 சதவீதமாகும். அதேபோன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 7.05 லட்சம் விமான பயணிகளை கையாண்டு 12.3 சதவீத சந்தைப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
ஏா் இந்தியா, விஸ்டாரா மற்றும் ஏா்ஏசியா இந்தியா நிறுவனங்கள் ஏப்ரலில் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கை முறையே 5.47 லட்சம், 3.11 லட்சம் மற்றும் 3.55 லட்சமாக இருந்தன.
ஆறு முக்கிய இந்திய ஏா்லைன்ஸ் நிறுவனங்களின் இருக்கை நிரம்பும் விகிதமானது 52 சதவீதம் முதல் 70.8 சதவீதம் வரையில் இருந்தது என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.