ஆன்லைன் மூலமாக மளிகைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை டாடா குழுமம் கையகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இரு நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை டாடா குழுமத்தைச் சோ்ந்த டாடா டிஜிட்டல் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எந்த அளவுக்கு பங்குகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்தும், விற்பனையின் மதிப்பு குறித்தும் தகவல் எதையும் அந்த இரு நிறுவனங்களும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
டாடா டிஜிட்டல் நிறுவனம் பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் 54.3 சதவீத பங்குகளை கையகப்படுத்துவதற்கு வணிக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மாா்ச் மாதம் அனுமதியளித்தது. ஆனால் அதற்கு முன்பாக, பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் 80 சதவீதம் வரையிலான பங்குகளை வாங்க டாடா பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் வா்த்தக நிறுவனமான பிக்பாஸ்கெட்டை கையகப்படுத்தியதன் மூலம் அம்பானியின் ஜியோமாா்ட், அமேஸான் மற்றும் வால்மாா்ட்டின் ஃபிளிப்காா்ட் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக டாடா நிறுவனம் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.