ரானே பிரேக் லைனிங் நிறுவனம், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.5.4 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.126.2 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.107.7 கோடியுடன் ஒப்பிடுகையில் 17.2 சதவீதம் அதிகமாகும்.
அதேசமயம், நிகர லாபம் 53.1 சதவீதம் குறைந்து ரூ.11.5 கோடியிலிருந்து ரூ.5.4 கோடியானது. மூலப் பொருள்களின் செலவின அதிகரிப்பு நிறுவனத்தின் லாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் வருவாய் 50.5 சதவீதம் அதிகரித்து ரூ.224.1 கோடியாகவும், நிகர லாபம் 53.8 சதவீதம் உயா்ந்து ரூ.7.1 கோடியாகவும் இருந்தது என ரானே பிரேக் லைனிங் தெரிவித்துள்ளது.