சென்செக்ஸ் முதல் முறையாக 57,000-ஐ கடந்து சாதனை: சந்தை மதிப்பு ரூ.250 லட்சம் கோடியாக உயர்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் உற்சாகம் இருந்தது.
சென்செக்ஸ் முதல் முறையாக 57,000-ஐ கடந்து சாதனை: சந்தை மதிப்பு ரூ.250 லட்சம் கோடியாக உயர்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் உற்சாகம் இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 663 புள்ளிகள் உயர்ந்து முதல் முறையாக 57,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.
 காரணம் என்ன?: உலகளாவிய குறிப்புகள் சாதகமாக இருந்தன. இதன் தாக்கம் இரண்டாவது நாளாக உள்நாட்டுச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மீடியா தவிர அனைத்து முக்கியத் துறை பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு காணப்பட்டது. இரண்டாவதுநாளாக நிதி, உலோகப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு காணப்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 மேலும், முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணிப் பங்குகள் வெகுவாக உயர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி மேலும் புதிய உச்சத்தைப் பதிவு செய்ய முக்கியக் காரணமாக இருந்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.250.02 லட்சம் கோடி : மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,341 பங்குகளில் 1,571 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,623 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 147 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 203 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 21 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.
 மேலும், 309 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 216 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.2.72 லட்சம் கோடி உயர்ந்து ரூ.250.02 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 7,81,56,208-ஆக உயர்ந்துள்ளது.
 புதிய சாதனை: சென்செக்ஸ் காலையில் 105.39 புள்ளிகள் கூடுதலுடன் 56,995.15-இல் தொடங்கி, 56,859.10 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 57,625.26 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 662.63 புள்ளிகள் உயர்ந்து 57,552.39 என்ற புதிய உச்சத்தில் நிலைபெற்றது. சென்செக்ஸ் முதல் முறையாக 57,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
 சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 27 பங்குகள் ஆதாயம் பெற்றன. 3 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன.
 பார்தி ஏர்டெல் அமோகம்:
 சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பார்தி ஏர்டெல் பங்குகளுக்கு இரண்டாவது நாளாக நல்ல வரவேற்பு இருந்தது. கூடுதல் நிதி திரட்டும் திட்டம் தொடர்பான விளக்க அறிவிப்பும், தொலைபேசிக் கட்டணம் உயர்த்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பால் அந்தப் பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிகக் கவனம் செலுத்தினர். இதனால், 6.6 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபைனான்ஸ் 4.94 சதவீதம், பஜாஜ் ஃபின்சர்வ் 3.34, ஏஷியன் பெயிண்ட்ஸ் 3.05 சதவீதம் உயர்ந்தன. மேலும், டைட்டன், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணிப் பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. அதேசமயம், நெஸ்லே, இன்டஸ்இண்ட் பேங்க், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ் ஆகியவை மட்டும் சரிவைச் சந்தித்தன.
 17,000 கடந்தது நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 866 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 920 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு மேலும் 201.15 புள்ளிகள் (1.19 சதவீதம்) உயர்ந்து 17,132.20-இல் நிலை பெற்றது. காலையில் 16,947.50-இல் தொடங்கிய நிஃப்டி, 16,915.85 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,153.50 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
 நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. மீடியா தவிர்த்து அனைத்து துறை சார் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி ஐடி, மெட்டல், ஹெல்த்கேர், ஃபைனான்சியல் சர்வீசஸ் குறியீடுகள் 1.20 முதல் 1.55 சதவீதம் வரை உயர்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com