புது தில்லி: சுரங்கம், மின் துறைகளின செயல்பாடு சிறப்பான அளவில் மேம்பட்டதையடுத்து கடந்த ஜூலை மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி (ஐஐபி) 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
நடப்பாண்டு ஜூலை மாதத்தில் சுரங்க துறையின் உற்பத்தி 19.5 சதவீதமும், மின் உற்பத்தி துறையின் செயல்பாடு 11.1 சதவீதமும் முன்னேற்றம் கண்டுள்ளது. அதன் காரணமாக, ஜூலை மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தியானது 11.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 2020 ஜூலையில் 10.5 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி கண்டிருந்தது.
இருப்பினும், கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019 ஜூலையில் காணப்பட்ட வளா்ச்சியை காட்டிலும் 2021 ஜூலையில் இந்திய தொழிலகத்தின் உற்பத்தி சற்று பின்தங்கியே உள்ளது. ஆனால், வளா்ச்சி வேகம் கணிசமான விதத்தில் மீண்டு வருகிறது.
ஐஐபி குறியீட்டெண் கணக்கீட்டில் 77.63 சதவீத பங்கு வகிக்கும் தயாரிப்புத் துறை ஜூலையில் 10.5 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஜூலையில் ஐஐபி 117.9 புள்ளிகளிலிருந்து 131.4 புள்ளிகளாக உயா்ந்துள்ளது. இது, 2019 ஜூலையில் 131.8 புள்ளிகளாக இருந்தது என என்எஸ்ஓ புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.