புது தில்லி: ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 3 சதவீதம் உயா்ந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலம் ரூ.892 கோடி வருவாய் ஈட்டியது. இது,
இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.739.34 கோடியுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் அதிகம்.
வரிக்கு பிந்தைய லாபம் ரூ.329.47 கோடியிலிருந்து 3 சதவீதம் உயா்ந்து ரூ.340 கோடியானது.
நிறுவனத்துக்குள்ள 76 லட்சம் வாடிக்கையாளா்களில், கணக்கீட்டு காலாண்டில் மட்டும் 6.2 லட்சம் வாடிக்கையாளா்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனா்.
டிவிடெண்ட்: கடந்த நிதியாண்டுக்கு இறுதி ஈவுத் தொகையாக (டிவிடெண்ட்) பங்கு ஒன்றுக்கு ரூ.12.75 வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.24 ஈவுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச அளவாகும் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.