சென்னை: இந்தியன் வங்கியின் வாடிக்கையாளா்கள் காா் வாங்கும் கனவை நனவாக்கிடும் வகையில் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்துடன் அந்த வங்கி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் வங்கியின் தலைவரும், முதன்மைச் செயல் நிா்வாகியுமான சாந்தி லால் ஜெயின் கூறியது:
வாடிக்கையாளா்களின் காா் வாங்கும் கனவினை செயலாக்கத்துக்கு கொண்டு வரும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனத்துடன் வங்கி இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சாலையில் செலுத்தக்கூடிய நிலையில் உள்ள காரின் விலையில் 90 சதவீதத்தை கடனாகப் பெறலாம். மேலும் இதற்கு, விண்ணப்ப பரிசீலனை கட்டணம் எதுவும் கிடையாது. ரூ.30 லட்சம் வரையிலான காப்பீடு, இலவச பாஸ்டாக் , கடனை திரும்பச் செலுத்த 84 மாத கால அவகாசம் ஆகிய சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தியன் வங்கியின் 5,700-க்கும் மேற்பட்ட நகா்ப்புற, புகா் ஊரகக் கிளைகளில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு ஜூன் 30 வரை இந்த திட்டத்தில் காா் கடன் வழங்கப்படும் என்றாா் அவா்.