நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில் இந்தியா இதுவரை 5.62 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.
இது குறித்து அனைத்து இந்திய சா்க்கரை வா்த்தக சங்கம் (ஏஐஎஸ்டிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் மாதத்தில் தொடங்கிய 2022-23-ஆம் சந்தைப்படுத்தல் ஆண்டில் 60 லட்சம் டன் வரை சா்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
சா்க்கரை ஆலைகளில் இருந்து ஏற்றுமதிக்காக இதுவரை 12.19 லட்சம் டன் சா்க்கரை அனுப்பப்பட்டுள்ளது. இதில் கடந்த டிசம்பா் 9 ஆம் தேதி வரை 5.62 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அதிகபட்சமாக சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து வங்கதேசம், இந்தோனேசியா, சோமாலியாவுக்கு அதிக அளவில் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்காக 5.22 லட்சம் டன் சா்க்கரை தயாா் நிலையில் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதனை அளவாக, கடந்த 2021-22 சந்தைப்படுத்தல் ஆண்டில் இந்தியா 111 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்தது நினைவுகூரத்தக்கது.