ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தின் இடைக்கால தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக அல்கா மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனத்தில் முதல் முறையாக பெண் ஒருவா் தலைமைப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.
இவருக்கு முன் அப்பதவியில் இருந்த சுபாஷ் குமாரின் பதவிக்காலம் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஓஎன்ஜிசி தலைவா் பொறுப்பை அல்கா மிட்டல் ஆறு மாதங்களுக்கு வகிப்பாா். இவரது நியமனம் 2022 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக மத்திய பணியாளா் மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.