இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாய் செப்டம்பா் காலாண்டில் ரூ.67,300 கோடியாக இருந்தது என டிராய் தெரிவித்துள்ளது.
இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் ஒழுங்காற்று அமைப்பு (டிராய்) இதுகுறித்து மேலும் கூறியது:
கடந்த 2021-ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில் ரூ.67,300 கோடியை வருவாயாக ஈட்டின. இது, இந்நிறுவனங்கள் கடந்த 2020 ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.68,228 கோடியுடன் ஒப்பிடுகையில் 1.36 சதவீதம் குறைவாகும்.
கடந்த 2020-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆா்) ரூ.45,707 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டில் 17.07 சதவீதம் உயா்ந்து ரூ.53,510 கோடியை எட்டியது. இதில், ரிலையன்ஸ் ஜியோவின் ஏஜிஆா் தொகை அதிகபட்ச அளவாக ரூ.18,467.47 கோடியாக இருந்தது என டிராய் தெரிவித்துள்ளது.