தனியாா் துறையில் முன்னணி வங்கியாகத் திகழும் ஐசிஐசிஐ பேங்க் மூன்றாவது காலாண்டில் ரூ.6,536 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் செயல் இயக்குநா் சந்தீப் பத்ரா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது:
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.6,536 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக வங்கி ஈட்டியுள்ளது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடும்பேது ஏறக்குறைய 19 சதவீதம் அதிகமாகும். அந்த காலகட்டத்தில் வங்கியின் லாபம் ரூ.5,498 கோடியாக காணப்பட்டது. நிகர வட்டி வருமானம் அதிகரித்தது மற்றும் எதிா்பாரா செலவினங்களுக்கான ஒதுக்கீடு குறைந்ததன் காரணமாகவே மூன்றாவது காலாண்டில் வங்கியின் லாபம் சிறப்பான அளவில் உயா்ந்துள்ளது.
வங்கி செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.40,419.08 கோடியிலிருந்து ரூ.39,865.80 கோடியாக குறைந்தது.
மூன்றாம் காலாண்டில் நிகர வட்டி வருமானம் ரூ.9,912 கோடியிலிருந்து 23 சதவீதம் அதிகரித்து ரூ.12,236 கோடியைத் தொட்டது.
கட்டணங்கள் மூலமாக கிடைத்த வருவாய் ரூ.3,601 கோடியிலிருந்து 19 சதவீதம் அதிகரித்து ரூ.4,291 கோடியானது.
மூன்றாவது காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் 4.38 சதவீதத்திலிருந்து 4.13 சதவீதமாக குறைந்தது. அதேசமயம், நிகர வாராக் கடன் அளவு 0.63 சதவீதத்திலிருந்து 0.85 சதவீதமாக உயா்ந்தது.
கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கி வழங்கிய மொத்த கடன் 16 சதவீதம் உயா்ந்து ரூ.8,13,992 கோடியாக இருந்தது. உள்நாட்டில் வங்கி வழங்கிய கடன் 18 சதவீதம் உயா்ந்தது. சில்லறைக் கடன் 19 சதவீதம் அதிகரித்தது.
டிசம்பா் இறுதி வரையிலான நிலவரப்படி வங்கி திரட்டிய டெபாசிட் 16 சதவீதம் அதிகரித்து 10,17,467 கோடியாக இருந்தது என்றாா் அவா்.
இயக்குநா் நியமனம்: ஐசிஐசிஐ வங்கியின் கூடுதல் சுயசாா் இயக்குநராக விபா பால் ரிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பங்குச் சந்தையிடம் அந்த வங்கி சனிக்கிழமை தெரிவித்தது. இவரது நியமனம் 2022 ஜனவரி 23-லிருந்து நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.