பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் 1.33 லட்சம் கோடி: நிதியமைச்சகம்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.33 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகம்.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.1,33,026 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.24,435 கோடி; மாநில ஜிஎஸ்டி ரூ.30,779 கோடி; ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.67,471 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.33,837 கோடியும் அடங்கும்); செஸ் வரி ரூ.10,340 கோடி(சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.638 கோடியும் அடங்கும்).
தொடா்ந்து கடந்த 5 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வருவாயாக கடந்த ஜனவரி மாதம் ரூ.1,40,986 கோடி வசூலானது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டி, கடந்த ஆண்டு பிப். மாத ஜிஎஸ்டி வசூலைவிட 18 சதவீதமும், கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூலைவிட 26 சதவீதமும் அதிகம்.
வரும் மாதங்களிலும் ஜிஎஸ்டி வசூலில் இதேபோன்ற நோ்மறையானப் போக்குத் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.