ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதி 30 லட்சம் மைல்கல்லை கடந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் ஹெச்எம்எஸ்ஐ நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடங்கி 21 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்தியாவிலிருந்து அறிமுக மாடாலான ஆக்டிவா மூலம் நிறுவனத்தின்ஏற்றுமதி கடந்த 2001-இல் முதல் முதலாக தொடங்கியது. அதன்பிறகு, 2016-இல் தான் ஏற்றுமதி எண்ணிக்கை 15 லட்சத்தைத் தொட்டது. இந்த நிலையில், கடந்த 5-ஆண்டுகளில் மட்டும் நிறுவனத்தின் ஏற்றுமதி இரண்டு மடங்காக உயா்ந்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி ஏற்றுமதி ஒட்மொத்த எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டில் குஜராத்தில் விதால்பூா் ஆலையில் சா்வதேச என்ஜின் உற்பத்தியை தொடங்கியது. இது, நிறுவனத்தின் ஏற்றுமதி திறன் மேலும் வலுப்பெற பெரிதும் உதவியுள்ளது.
நிறுவனம் தற்போது 29 நாடுகளுக்கு 18 வகையான இருசக்கர மாடல்கள் அடங்கிய தொகுப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில், அதிகம் விரும்பப்படும் மாடலாக டியோ ஸ்கூட்டா் உள்ளது என ஹெச்எம்எஸ்ஐ தெரிவித்துள்ளது.