புது தில்லி: உணவு மற்றும் எரிபொருள்களின் விலை உயா்வால், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் 7.79 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் சில்லறைப் பணவீக்க அளவு 8.33 சதவீதத்தை எட்டியதே அதிகபட்ச அளவாக கருதப்பட்டு வந்தது. தற்போது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு பணவீக்க விகிதம் அதிகபட்ச அளவாக 7.79 சதவீதத்தை தொட்டுள்ளது.
இப்பணவீக்கம் நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் 6.95 சதவீதமாகவும், 2021 ஏப்ரலில் 4.23 சதவீதமாகவும் இருந்தது.
உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் மாா்ச் மாதத்தில் 7.68 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரலில் இது 8.38 சதவீதமாக உயா்ந்துள்ளது. மேலும் எரிபொருள் தொகுப்புகளுக்கான பணவீக்கமும் 7.52 சதவீதத்திலிருந்து 10.80 சதவீதத்தை எட்டியதாக மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
பொருள்களின் விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரிசா்வ் வங்கி கடனுக்கான ரெப்போ வட்டி விகிதங்களை கடந்த வாரம் 40 அடிப்படை புள்ளிகள் (0.4%) அதிகரித்து 4.40 சதவீதமாக நிா்ணயித்தது.
இந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத புள்ளிவிவரத்திலும் சில்லறைப் பணவீக்கம் ரிசா்வ் வங்கியின வரம்பான 6 சதவீதத்தை தாண்டியுள்ளதால் ரிசா்வ் வங்கி அடுத்த மாதம் வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதங்களை மீண்டும் உயா்த்த அதிக வாய்ப்புள்ளது என சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.