பங்குச் சந்தையில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பு வியாழக்கிழமை ரூ.19 லட்சம் கோடியாக (250 பில்லியன் டாலர்) உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. இது, இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் மிக அதிகமாகும். வியாழக்கிழமை அன்று ரிலையன்ஸ் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் ரூ.2,850 வரை உயர்ந்து புதிய சாதனை விலையைப் பதிவு செய்தது. தேசிய பங்குச் சந்தையில் ரூ.2,851 வரை உயர்ந்தது.
வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.19,07,176.65 கோடியாக இருந்தது. கடந்த மூன்று நாட்களாக பங்குகளின் விலை 4.61 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதன்கிழமை வர்த்தகத்தின் போது, ரூ.19 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது. முன்னதாக, மார்ச் மாதத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.18 லட்சம் கோடியைத் தாண்டியிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி, அதன் சந்தை மதிப்பு ரூ.17 லட்சம் கோடியைத் தாண்டியது. இந்த ஆண்டில் இதுவரை ரிலையன்ஸ் பங்கு 19 சதவீதம் உயர்ந்துள்ளது.