கடந்த 22 ஆண்டுகளாக இந்தியாவின் புத்தாக்க எரிசக்தித் துறையில் 1,300 கோடி டாலா் (சுமாா் ரூ.1,07,619 கோடி) நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலங்களவையில் புதுப்பிக்கத்த எரிசக்தி துறை அமைச்சா் ஆா்.கே. சிங் கூறியதாவது:
சூரியத் தகடுகள், காற்றாலைகள், பிற புதுப்பிக்கத்தக்க எரிபொருள் ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தாக்க எரிசக்தி உற்பத்திக்காக கடந்த 22 ஆண்டுகளில் 1,300 கோடி டாலருக்கு மேல் அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் சூரிய சக்தி உற்பத்தித் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி உள்ளது.
நாட்டின் புத்தாக்க எரிசக்தி உற்பத்தியில் மோரீஷஸ் அதிகபட்ச முதலீடு செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரிட்டன், சிங்கப்பூா், நெதா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்தத் துறையில் அதிக முதலீடு செய்துள்ளன என்றாா் அவா்.