ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஆங்கர் முதலீட்டாளர்களின் பங்குகள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டது.
எல்ஐசி மூலம் ரூ.21,000 கோடி நிதி திரட்டும் முயற்சியில் இருக்கும் மத்திய அரசு எல்ஐசியில் உள்ள 22,13,74,920 பங்குகளை ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 என்கிற அடிப்படையில் விற்பனை செய்கிறது.
அதன் முதல்கட்டமாக பொதுப் பங்கிற்கு முன் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பங்குகளை முழுமையாக விற்பனை செய்துள்ளது, இதன் மூலம் ரூ.5,627 கோடி திரட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீதமுள்ள தொகையைத் திரட்ட எல்ஐசி பொதுப் பங்குகள் வெளியீடு நாளை மே 4-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு 5 சதவீத பங்கு அல்லது ரூ.31.6 கோடி பங்கை விற்பனை செய்ய முடிவெடுத்து, அதற்கான வரைவு அறிக்கைகளை செபியிடம் தாக்கல் செய்திருந்தது. ஆனால், உக்ரைன்- ரஷியா போரால் சந்தையில் காணப்பட்ட நிலையற்ற தன்மை காரணமாக பொதுப் பங்கு விநியோக திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பங்கு வெளியீட்டு அளவை 5 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக கடந்த வாரம் மத்திய அரசு குறைத்தது குறிப்பிடத்தக்கது.