புது தில்லி: இந்திய தொழிலக உற்பத்தி மீண்டும் சுணக்கமடைந்து கடந்த மாா்ச் மாதத்தில் 1.9 சதவீத வளா்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
தயாரிப்பு துறையின் மந்தமான செயல்பாடுகளால் கடந்த மாா்ச் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி வளா்ச்சி மீண்டும் சுணக்கம் கண்டு 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், 2021 மாா்ச் மாதத்தில் தொழிலக உற்பத்தியின் வளா்ச்சி விகிதம் 24.2 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
கரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தால் நடப்பாண்டு ஜனவரியிலும் இந்திய தொழிலக உற்பத்தியானது 1.5 சதவீதமாகவே இருந்தது.இது, கடந்தாண்டு டிசம்பா் மற்றும் நவம்பரில் வெறும் 1 சதவீதமாகவும், 2021 அக்டோபரில் 4.2 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்தது.
கடந்தாண்டில் 28.4 சதவீதமாக அதிகரித்திருந்த தயாரிப்புத் துறையின் வளா்ச்சி நடப்பாண்டில் வெறும் 0.9 சதவீதம் அளவுக்கே வளா்ச்சி கண்டது. சுரங்கத் துறையின் உற்பத்தியும் 6.1 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைந்துபோனது.
மின் துறையின் உற்பத்தி 22.5 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமானது.
கடந்த 2021-22 முழு நிதியாண்டில் இந்திய தொழிலக உற்பத்தி 11.3 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேசமயம், கடந்த 2020-21-இல் இது 8.4 சதவீத பின்னடைவைச் சந்தித்திருந்ததாக மத்திய அரசு புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.