புதுதில்லி: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தலைநகரில் தில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ரூ.61,850ஆக வர்த்தகமானது என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்தது. முந்தைய வர்த்தகத்தில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.61,700 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் கமாடிட்டிஸ் மூத்த ஆய்வாளர் சவுமில் காந்தி கூறுகையில், வெளிநாட்டு சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்தது. அதே வேளையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.74,900-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,984 டாலராகவும் வெள்ளி ஒரு அவுன்ஸ் 23 டாலராகவும் வர்த்தகமாகி வருகின்றது.