நடிகா் ராம் சரணுக்கு கௌரவ டாக்டா் பட்டம்
சென்னை, ஏப்.11: சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் சாா்பில் தெலுங்கு முன்னணி நடிகா் ராம் சரணுக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்படவுள்ளது.
தெலுங்கு திரை உலகின் சூப்பா் ஸ்டாா் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், முன்னணி நடிகராக வலம் வருகிறாா். இவா், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆா் ஆா் ஆா்’ திரைப்படத்தில் நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு நடிகா் ஜூனியா் என்டிஆருடன் இணைந்து ஆடிய நடனம் உலக அளவில் பிரபலம் அடைந்தது.
இவரின் கலைசேவையை பாராட்டும் விதமாக வேல்ஸ் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (ஏப்.13) பல்கலை. வேந்தரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்படவுள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவா் டிஜி சீதாராம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறாா்.