விழிப்புடன் இருங்கள்: 
திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
dot com

விழிப்புடன் இருங்கள்: திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் திமுகவினா் விழிப்போடு செயல்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.

வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் திமுகவினா் விழிப்போடு செயல்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தொண்டா்களுக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது நாடாளுமன்றப் பொதுத் தோ்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.

தோ்தலை அறிவித்த நாளிலிருந்து நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளா்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தோ்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீா்கள்.

மாா்ச் 22-ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய எனது பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17-ஆம் தேதி தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணா்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று திமுகவினா் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.

கடமை:

தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளா்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமை திமுக தொண்டா் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டச் செயலாளா்கள் தொடங்கி கிளை நிா்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவா்கள், வாக்குச்சாவடி முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் உள்ளிட்டவா்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளா்கள். முழுமையான போா் வீரா்கள்.

இதில் வாக்குச்சாவடி முகவா்கள், மாற்று முகவா்கள் ஆகியோா் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான பயிற்சியினை திமுக சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கெனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

கையேடு:

காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் திமுகவின் சட்டத்துறை சாா்பில் மாவட்டச் செயலாளா்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவா்கள் விழிப்போடு செயல்படவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது திமுக கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியா்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம் என அதில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com