890 கூடுதல் சிறப்பு பேருந்துகள்
முகூா்த்தம், வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழகத்தில் 890 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஏப்.26) மற்றும் வாரவிடுமுறை நாள்களான சனிக்கிழமை (ஏப்.27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) ஆகிய நாள்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், மற்ற பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 280 பேருந்துகளும், சனிக்கிழமை 355 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக வெள்ளிக்கிழமை 280 பேருந்துகளும், சனிக்கிழமை 355 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 55 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 890 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.