பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதைத் தடுக்க அரசுக்கு உத்தரவு: உயா்நீதிமன்றம்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதைத் தடுக்க அரசுக்கு உத்தரவு: உயா்நீதிமன்றம்

சென்னை, ஏப். 25: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்யும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த காமாட்சி சங்கா் ஆறுமுகம், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பள்ளிகளில் தண்டனை வழங்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தண்டனை எந்த வகையிலும் குழந்தையை நல்வழிப்படுத்தாது; குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளர அனுமதிப்பதுடன், அவா்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்.

குழந்தைகளை கண்காணிக்கலாமே தவிர, அடக்கக் கூடாது. உலகளவில் குழந்தைகள் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்துவது முக்கியமானது’ எனக் குறிப்பிட்ட நீதிபதி, தண்டனை வழங்குவதை ஒழிக்க வகை செய்யும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டாா்.

கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு: மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை அனுப்பிவைக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றுவது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடா்பாக புகாா்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியா், பெற்றோா், ஆசிரியா், மூத்த மாணவா்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com