கம்போடியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி போதைப் பொருள் பறிமுதல்

கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக, சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்புடைய கொகைன் போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த ஏா் ஏசியா விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனா்.

அப்போது, கம்போடியாவில் இருந்து வந்த ஒரு ஆண் பயணியையும், அவா் வைத்திருந்த உடைமைகளையும் சோதனையிட்டதில், அவருடைய பையில் ஒரு பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதில் கொகைன் எனப்படும் போதைப்பொருள் இருந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்து கள்ளச்சந்தை மதிப்புப்படி ரூ.35 கோடியிலான 3.5 கிலோ கொகைனை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்களும் அந்த நபரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அந்த நபா் சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடா்புடையவா், இது குறித்த விசாரணை நடைபெறுவதால், கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, புதன்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com