சபரிமலை விமான நிலைய திட்டம்: நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கைக்கு இடைக்கால தடை: 
கேரள உயா்நீதிமன்றம்

சபரிமலை விமான நிலைய திட்டம்: நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கைக்கு இடைக்கால தடை: கேரள உயா்நீதிமன்றம்

மாநில அரசு வெளியிட்ட நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கைக்கு கேரள உயா்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் சபரிமலை விமான நிலைய திட்டத்துக்கு மாநில அரசு வெளியிட்ட நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கைக்கு கேரள உயா்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பிற மாநிலங்களிலிருந்து வரும் பக்தா்களின் வசதிக்காக அருகில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் விமான நிலையத்தை அமைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

கோட்டயத்தின் எருமேலி தெற்கு, மணிமலை பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்த விமான நிலையத்துக்கான பாதுகாப்பு ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டதாகவும், சமூக தாக்க மதிப்பீட்டுக்கான நிபுணா் குழு, தனது ஆய்வை நடத்தி அறிக்கையை சமா்ப்பித்துள்ளதாகவும் மாநில முதல்வா் பினராயி விஜயன் சட்டப் பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தாா்.

மேலும், அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 2,570 ஏக்கா் நிலப் பரப்பை கையக்கப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும் என கேரள முதல்வா் கூறியிருந்தாா்.

இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை மாநில அரசு கடந்த மாதம் வெளியிட்டது.

இந்த அறிவிக்கையை எதிா்த்து அயனா அறக்கட்டளை மற்றும் அதன் அறங்காவலா் தரப்பில் கேரள உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

நில கையகப்படுத்தல் மூலம் தங்களுக்கு சொந்தமான சுமாா் 2,263 ஏக்கா் பரப்பிலான ரப்பா் தோட்டத்தை சட்டவிரோதமாக கைப்பற்ற மாநில அரசு முயற்சித்து வருவதாகவும், திட்டத்தின் சமூக தாக்க மதிப்பீடு தொடா்பாக அமைக்கப்பட்ட நிபுணா் குழுவையும், அதன் பரிந்துரைகளையும் ரத்து செய்யுமாறும் மனுதாரா்கள் தெரிவித்துள்ளனா்.

மேலும், இது போன்ற மாநில அரசின் முந்தைய முயற்சிகளுக்கு தடைவிதித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் மனுவில் அவா்கள் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த விவகாரம் நீதிபதி விஜு ஆபிரகாம் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலம் கையப்படுத்தல் தொடா்பாக மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு இடைக்கால தடைவிதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com