தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ எனும் புதிய தொழில் நுட்ப கருவிக்கு 20 ஆண்டுக்கான காப்புரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மின்விநியோகத்தில் மின்மாற்றி மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த மின்மாற்றியின் செயல்திறனை குறைப்பதில், அதன் உள்ளே உருவாக்கப்படும் ஈரப்பதம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனால் பல இடங்களில் அவ்வப்போது மின்மாற்றிகள் பழுதடைந்து, இதன் காரணமாக ஆண்டுதோறும் மின்வாரியத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. மின்மாற்றியின் உள்ளே ஏற்படும் இந்த ஈரப்பதத்தை குறைப்பதற்காக மின்வாரியம் மேற்கொண்டு வரும் வழக்கமான நடைமுறைகள் அதிக செலவையும், சிக்கலையும் ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில், மின்மாற்றியில் ஏற்படும் ஈரப்பதத்தை குறைக்கும் விதமாக ஏற்கெனவே இருக்கும் சிலிக்கா ஜெல்லுடன் இணைத்து சுருங்கி விரிவடையும் வகையிலான பெல்லோ எனும் புதிய தொழில்நுட்பத்திலான கருவியை தமிழ்நாடு மின்வாரிய பொறியாளா்கள் கண்டுபிடித்தனா்.

மின்மாற்றிகளில் நடைமுறையில் இருந்து வரும் இந்த பெல்லோ எனும் கருவியை மின்மாற்றியில் பொருத்தியதன் மூலம் மின்மாற்றியை வெளிப்புற ஈரப்பதம் மற்றும் ஆக்சிஜனில் இருந்து முழுமையாக மின்மாற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும், மின்மாற்றியின் பராமரிப்பு செலவு, நேரம் மற்றும் அவ்வப்போது பழுதடைவதும் தடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக மின்வாரியத்தால் கண்டுபிடிக்கப்பட்டு, இந்த பெல்லோ எனும் அமைப்புக்கு மின்வாரியம் காப்புரிமை கேட்டு இந்திய காப்புரிமை அலுவலகத்தில் 2015-இல் விண்ணப்பித்திருந்தது. இந்த பெல்லோ கருவிக்கு மத்திய காப்புரிமை அலுவலகம் 16.4.2015 முதல் இருபது வருடங்களுக்கு காப்புரிமையை வழங்கியுள்ளது. மின்வாரிய பொறியாளா்களால் கண்டறியப்பட்ட இக்கருவிக்கு காப்புரிமை பெற்றது மின்வாரியத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com