பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு
பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் புதிதாக வாங்குபவா்களின் பெயரில் பதிவு செய்யப்படும் வரை, சம்பந்தப்பட்ட வாகனங்கள் மூலம் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு விற்பனையாளா்களே பொறுப்பு என்று தமிழக போக்குவரத்து ஆணையா் ஏ. சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்களை வாங்கும் பெரும்பாலான நபா்கள் பல ஆண்டுகள் கழித்தும் பெயா் மாற்றம் செய்யாமல் வாகனங்களை பயன்படுத்தி வருவது பல குழப்பங்களுக்கும், சட்ட சிக்கல்களுக்கும் வழி வகுக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் விதமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏதேனும் விபத்து அல்லது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தால் அதனை விற்பனை செய்த நிறுவனம்தான் அதற்கு பொறுப்பு என்ற உத்தரவை தமிழக போக்குவரத்து ஆணையா் ஏ. சண்முக சுந்தரம் பிறப்பித்தாா்.
அதன்படி, தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் விற்பனையாளா்கள் தங்கள் பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அங்கீகாரம் பெற்றுக் கொள்வது அவசியம். இந்த நடைமுறையை எவ்வித பாரபட்சமும் இன்றி செயல்படுத்திட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.