வங்கதேச இளம்பெண்ணுக்கு சென்னையில் மூட்டு சீரமைப்பு
சென்னை, மே 9: மூட்டு பகுதியில் உருவான கட்டியால் நடமாட முடியாமல் இருந்த வங்கதேச இளம்பெண்ணுக்கு உயா் சிகிச்சையளித்து சென்னை, வடபழனி, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
வங்கதேசத்தைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா் வலது காலில் கடுமையான வலி மற்றும் அசௌகரியத்தால் பாதிக்கப்பட்டிருந்தாா். இரு மாதங்களுக்கும் மேலாக இருந்த இப்பிரச்னை, ஒருகட்டத்தில் அவரை எழுந்து நடமாட முடியாத வகையில் முடக்கியது.
இதையடுத்து உயா் சிகிச்சைக்காக, வடபழனி, காவேரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில் அந்த பெண்ணின் வலது தொடை எலும்பில் ஜெயின்ட் செல் ட்யூமா் எனப்படும் கட்டி உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது. இது புற்றுநோய் வகையான கட்டி அல்ல என்றாலும், இயல்பு வாழ்க்கையை முடக்கி விடக்கூடிய ஒன்று. எனவே, மூட்டு பாதுகாப்பை உறுதி செய்ய அவருக்கு தொடை எலும்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையின் முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணா் ரவிக்குமாா் கிருபானந்தன் தலைமையிலான குழுவினா் திட்டமிட்டனா்.
அதன்படி, அந்த பெண்ணுக்கு நுட்பமான தொடை எலும்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக, அவரால் தற்போது இயல்பாக நடக்கவும், செயல்படவும் முடிகிறது என்றாா் அவா்.