சென்னை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1.50 கோடி ஏமாற்றியதாக நடிகை புவனேஸ்வரி மற்றொரு வழக்கில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கே.கே.நகரைச் சேர்ந்த ரியஸ் எஸ்டேட் அதிபர் குருநாதன். இவருக்கும், நடிகை புவனேஸ்வரிக்கும் சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாம். இந்த பழக்கத்தின் அடிப்படையில், தான் ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நாடகத் தொடர் எடுப்பதாகவும், அதற்குப் பணம் தேவைப்படுவதாகவும் புவனேஸ்வரி அவரிடம் தெரிவித்தாராம்.
மேலும், இதற்காக குருநாதனிடம் அவர் பணம் கேட்டாராம். பின்னர், குருநாதனை அந்தத் தொடர் தயாரிப்பு நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதாக ரூ. 1.50 கோடி பணத்தை புவனேஸ்வரி, அவரிடமிருந்து பெற்றதாக கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட புவனேஸ்வரி, நாடகத் தொடர் தயாரிக்கவில்லையாம்.
இதனால் குருநாதன் பணத்தை திருப்பிக் கேட்ட போது புவனேஸ்வரி பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து குருநாதன், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஏற்கெனவே இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் புவனேஸ்வரியிடம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் உத்தரவு நகலை புதன்கிழமை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழங்கினர்.