இயக்குநர் ராம.நாராயணன் (66) உடல் சென்னையில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
சிறுநீரக உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம.நாராயணன் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.
அவரது உடல் திங்கள்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை, மகாலிங்கபுரத்திலுள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக ராம.நாராயணனின் உடல் வைக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், கவுண்டமணி, செந்தில், விவேக், சுந்தர்.சி, டி.ராஜேந்தர், அர்ஜுன், எஸ்.வி.சேகர், ஆனந்த்பாபு, கருணாஸ், இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்ஸி தலைவர் அமீர், நடிகை குஷ்பு, பாடலாசிரியர்கள் பா.விஜய், மதன் கார்க்கி, விவேகா, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் ராம.நாராயணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மகாலிங்கபுரம் இல்லத்திலிருந்து தியாகராய நகர், கண்ணம்மாபேட்டை மின் மயானத்துக்கு ராம நாராயணனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பிற்பகல் 3 அளவில் அவரது உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.
ராம.நாராயணனின் மகன் முரளி, இறுதிச் சடங்குகளைச் செய்தார்.