எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான "பாகுபலி' படத்தின் வசூல் இந்திய அளவில் குறிப்பிடத் தகுந்த சாதனையை நிகழ்த்தியது. பாலிவுட்டில் உருவாகும் படங்கள்தான் இவை போன்ற சாதனைகளை இதற்கு முன் நிகழ்த்தி இருந்தன. அச்சாதனைகளை உடைத்த தென்னிந்திய படம் என்ற பெயர் "பாகுபலி'க்குக் கிடைத்தது. இதனால் இப்படத்தில் நடித்த பிரபாஸுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலக அளவிலும் வெளிச்சம் கிடைத்தது. இதற்கான அங்கீகாரமாக உலகப் புகழ்பெற்ற "மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் இவர் நடித்த "பாகுபலி' கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது. உலகின் செல்வாக்கு மிக்க கதாபாத்திரங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் இந்த அங்கீகாரம், பிரபாஸின் பாகுபலி கதாபாத்திரத்துக்கு கிடைத்துள்ளது. 2017-ஆம் ஆண்டு பாங்காங்கில் நடக்கவுள்ள "மேடம் டுசாட்ஸ்' நிகழ்வுக்காக பிரபாஸின் மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.