தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, புகழ்பெற்ற முன்னாள் நடிகையாவார். தமிழ் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முத்திரை பதித்தவர்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதல்வராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார். தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
பிறப்பு: 24 பிப்ரவரி 1948
பிறந்த இடம்: மைசூர், இந்தியா
இயற்பெயர்: கோமலவள்ளி (பள்ளியில் சேர்ப்பதற்காக, அவருக்கு ஒரு வயது இருக்கும்போது இயற்பெயரான கோமலவள்ளியை மாற்றி, அவருக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டப்பட்டது)
பெற்றோர்: ஜெயராம் - வேதவள்ளி
தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை அவர் இழந்தார். அதன் பிறகு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட அவருடைய குடும்பம், தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றது.
பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், அவருடைய குடும்பம் சென்னைக்கு வந்தது.
பள்ளிக் கல்வி: சென்னையிலுள்ள சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் தனது கல்வியைத் தொடர்ந்த இவர். 1964 இல் அவர் பத்தாம் வகுப்பை முடித்தார். அப்போது மேல்படிப்பை மேற்கொள்ள அரசிடமிருந்து கல்வி உதவித் தொகை கிடைத்தபோதும், அதை ஏற்காமல் தனது 15 வயதிலேயே திரைப்படத் துறையில் அவர் கால் பதித்தார்.
கலை ஈடுபாடு: தனது 4 வயது முதலே கர்நாடக இசையையும், பரத நாட்டியத்தையும் கற்றுத் தேர்ந்தார். அதோடு மோகினி ஆட்டம், கதக்களி, மணிப்புரி போன்ற நடனங்களிலும் தேர்ந்தவராகத் திகழ்ந்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தனது பரதநாட்டியத்தை அரங்கேற்றியுள்ளார். திரைப்படங்களில் ஏராளமான பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார்.
மொழி புலமை: ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் புலமைபெற்ற அவர், மலையாளத்தைப் புரிந்துகொள்ளும் திறனையும் பெற்றிருந்தார்.