நண்பர்கள் வட்டம்

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு அங்கு பாடம் கற்றுத்தரும் பேராசிரியர்கள் மட்டுமின்றி நல்ல நண்பர்களும் அமைய வேண்டும்.

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு அங்கு பாடம் கற்றுத்தரும் பேராசிரியர்கள் மட்டுமின்றி நல்ல நண்பர்களும் அமைய வேண்டும். ஒரு சிலர் பள்ளிப்படிப்பை உள்ளூரில் படித்திருப்பார்கள். ஆனால் கல்லூரிப் படிப்பை வெளியூரில் படிக்கும் சூழ்நிலை இருக்கும்.
அவ்வாறு வெளியூரில் தங்கிப் படிக்கும் போது நமது பள்ளி நண்பர்கள் போல கல்லூரியிலும் நண்பர்கள் அமைவார்களா, அங்கிருக்கும் பேராசிரியர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது போன்ற பல சந்தேகங்கள் அனைவருக்கும் எழும்.
நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் மற்றவர்கள் தங்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளும் அளவிற்கு அன்பாக பழக வேண்டும். எவரையும் உதாசீனப்படுத்துவோ, ஒதுக்கி வைப்பதோ கூடாது. அது தேவையற்ற பிரச்னைகள், எதிரிகள் உருவாகுவதற்கு காரணமாகிவிடும்.
அறிமுகமில்லாத இடத்திற்கு செல்லும் போது அங்குள்ளவர்களிடம் பேசுவதற்கு தயங்கி ஒதுங்கி நிற்காதீர்கள். அது உங்களை தனிமைப்படுத்திவிடும். மற்றவர்களும் உங்களை தனிமை விரும்பியாகவே கருதி, உங்களிடம் பேசுவதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
உங்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பவர்களிடம் பழக முயற்சி செய்யுங்கள். வெறுமனே புன்னகை உதிர்த்து நலம் விசாரிப்பதோடு நிறுத்தி விடாதீர்கள். அவர்கள் உங்கள் நண்பர்களிடம் அந்த அளவுக்கு பழகுகிறார்களோ, அதில் பாதிஅளவுக்காவது நட்பு பாராட்ட தொடங்குகள்.
பழகிய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதற்கு பதில் மற்றவர்களையும் நண்பர்களாக்க முயற்சிப்பது உங்கள் நட்பு வட்டாரத்தை விரிவடைய செய்யும். அவர்களின் நம்பிக்கைக்குரியவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களிடம் நட்புணர்வோடு பழகுபவர்களிடம் நட்பை தக்க வைத்துக் கொள்ள முயற்சி எடுங்கள்.
புதிய நண்பர்களுடன் நட்புறவை பலப்படுத்தும் ஆர்வத்தில் பழைய நண்பர்களை மறந்துவிடாதீர்கள். பிரதிபலனை எதிர்பார்த்து யாரிடமும் பழகாதீர்கள்.
சுயநலத்துக்காக மட்டும் ஒருவரிடம் நெருக்கமாக பழகிவிட்டு, பின்பு அவரிடமிருந்து விலகிவிடாதீர்கள். அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். எப்போதும் போல நட்பு பாராட்டினால்தான் உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் வருவார்கள்.
நண்பர்களுடன் பழக ஆரம்பித்தபோது காண்பித்த ஆர்வத்தை எப்போதும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது பிரச்னை என்றால்தான் நம்மை தேடிவருவார் என்று எவரும் நினைத்துவிடும் அளவிற்கு நட்பை பலகீனப்படுத்தி விடக்கூடாது.
நண்பரிடம் நன்றாக சிரித்துப் பேசி மகிழ்ந்து பின்னர் அந்த நண்பர் இல்லாதபட்சத்தில் அவரை பற்றி மற்றவரிடம் குறை சொல்லாதீர்கள். அது ஒட்டுமொத்த நட்பு வட்டத்துக்கும் களங்கம் ஏற்படுத்தி விடும். அது உங்கள் மீது மற்றவர்கள் கொண்டிருக்கும் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும்.
எவ்வளவுதான் நெருங்கிப் பழகும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களுடைய குடும்ப விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடாதீர்கள். நண்பர்கள் கவலையில் ஆழ்ந்திருக்கும் சமயத்தில் அவர்களை உற்சாகப்படுத்தும்படி பேசுங்கள். அவர்களே விரும்பாத சூழலில் ஆலோசனை கூறாதீர்கள்.
அதேவேளையில் நண்பர்களின் செயல்பாடுகள் தவறாக அமையும்படி இருந்தால் சுட்டிக்காட்டத்தயங்காதீர்கள். அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தக்க ஆலோசனைகளை கூறுங்கள்.
நட்புக்குப் பொறுமை மிக அவசியம். எந்த சூழலிலும் நண்பர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காதீர்கள். நிதானம் இழந்துவிடாதீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். அது நல்ல நட்புறவை நீடிக்க துணைநிற்கும். பொதுவான விஷயங்களைப் பேசினால் பிரச்னை ஏற்படுவதில்லை.
நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது நண்பர்கள் காது கொடுத்து கேட்கிறார்களா இல்லை அடிக்கடி குறுக்கீட்டு பேசுகிறார்களா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறுக்கீடு செய்து கொண்டிருந்தாலோ, வேறு ஏதாவது பேச முயற்சித்தாலோ
உங்கள் பேச்சை அவர்கள் ஆழ்ந்து கேட்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
சிலரிடம் குடும்ப விஷயங்கள் அனைத்தையும் கொட்டிவிடாதீர்கள். அவர்கள் உடனே தங்களுடைய குடும்பத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஒருசில விஷயங்கள் அவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். உங்களுடைய பிரச்னையைவிட அவர்களுடைய குடும்ப விவகாரம் சிக்கலானதாக இருக்கலாம்.
நம்மை விட இவர் எவ்வளவோ பரவாயில்லை என்ற உள்ளுணர்வு தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடுவதாக அமைந்துவிடக்கூடாது. அது அவர்களுக்குள் பொறாமையை ஏற்படுத்திவிடும்.
அவர்கள் மூலம் உங்கள் குடும்பத்தில் பிரச்னை மேலும் அதிகரிக்கும் நிலையும் ஏற்படலாம். உங்கள் நலனில் எந்த அளவிற்கு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்து அதற்கேற்ப அவர்களிடம் பழகுவதே சிறந்தது.
உங்கள் நண்பர்களில் யாராவது தீய பழக்கவழக்கங்களை கொண்டிருந்தால் அவர்களின் நட்பை உடனே துண்டித்துவிடுங்கள். அதுவே உங்களுக்கும் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது.
தீய பழக்கவழக்கங்கள் கொண்டவர்களின் நட்பை கைவிடுவதால் உங்களுக்கு எந்த தீங்கும் நேராது. எனவே துணிந்து அவர்களின் நட்பை துண்டித்துக் கொள்ளுங்கள். நல்ல அணுகுமுறையை பின்பற்றினால் உங்கள் நட்பு வட்டாரம் விரிவடைந்து கொண்டே போகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com