மொழிப் பகையை மாற்ற...

கடந்தகாலக் கசப்புணர்வுகளைக் காலம் மாற்றிக் கொண்டு வருகிறது.

கடந்தகாலக் கசப்புணர்வுகளைக் காலம் மாற்றிக் கொண்டு வருகிறது. சிறுசிறு சலசலப்பு இருந்தாலும் மக்களவையில் உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் பதவி ஏற்றிருக்கிறார்கள். இணக்கமான சூழ்நிலையில் வாழப் புதிய தலைமுறை ஏங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்வியலை வணிக அரசியலாக்க இளைஞர்கள் இனி அனுமதிக்கப் போவதில்லை. காலத்தில் வாழ விரும்புகிறவர்கள், கடந்த காலப் பகைமைச் சூட்டில் வாட முன்வரப் போவதில்லை. முன்னோர் அனுபவங்களும் சிந்தனைகளும் வளர்ச்சிக்கு எருவாகலாம்; எருவே உணவாக முடியாதே! 
இந்தியாவின் மொழிக்கொள்கை, வளர்ந்துவரும் நாடுகளின் வழிகாட்டுதலோடும் கைவரப் பெற்றிருக்கும் தொழில்நுட்பச் சாத்தியப்பாடுகளின் துணையோடும் இப்போதேனும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இந்தியா விடுதலை அடைவதற்கும் முன்பாகவே மொழிப் பிரச்னை தொடங்கிவிட்டது.
இந்தியாவின் ஆட்சிமொழி பற்றிய சிக்கல் வெளிப்படும் முன்பே கல்விமொழி பற்றிய சிக்கலைக் கண்டுகொண்டு 1938-ஆம் ஆண்டிலேயே களத்தில் இறங்கியிருக்கிறது தமிழகம். அது கல்வியில் பாடமொழிப் பிரச்னை. இப்போதும் தேசியக் கல்விக் கொள்கையில் பாடமொழிப் பிரச்னை.
புதிய தேசியக் கல்விக்கொள்கையில் பாடமொழிகள் குறைந்தது மூன்று என்று கூறப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதமும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்தி பேசாத மாநிலத்தில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்றும் இந்தி மாநிலங்களுக்கு அவர்கள் விரும்பும் இந்திய மொழிகளில் ஒன்று என்றும் சொன்னார்கள். பின்னர், இந்தி பேசாத மாநிலங்களுக்கும் ஏதாவதொரு இந்திய மொழி என்று இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான பாடமொழிக் கொள்கை என்று சொல்லி இருக்கிறார்கள்.
மூன்றாவது மொழி மாணவர்கள் விரும்புகிற ஏதாவது ஒரு இந்திய மொழி என்பது, இந்தி பேசாத மக்களின் முழங்கையில் தேன் தடவிவிடுகிற வேலை. ஏதாவது ஒரு இந்திய மொழி என்பதற்கு நடைமுறையில் பயன்பாட்டளவில் வாய்ப்பே இல்லை. ஏனெனில், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்பில்லை. எனவே, ஏதாவதொரு இந்திய மொழி என்பது, ஆட்சியாளர்கள் விரும்புகிற மொழியாக அமையும். 
அதாவது இந்தி மொழியே, இந்தி பேசாத மாநிலங்களின் மூன்றாவது மொழியாகும் சூழல் உருவாக்கப்படும்.
 தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை மிகவும் தெளிவானது. ஆட்சிமொழி தமிழ் மட்டுமே. கல்விமொழிக் கொள்கையில் பாடமொழிகள் இரண்டு மட்டுமே-தமிழும் ஆங்கிலமும். 
புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இந்தியா முழுவதற்கும் மூன்று பாடமொழிகள் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள் இவ்வாறு கொள்கை வகுப்பதற்கு இவர்கள் கண்டறிந்ததாகச் சொல்லப்படும் எதிர்காலத் தேவைகளை நம்புவதற்கான தரவுகள் வரைவு அறிக்கையில் இடம்பெறவில்லை. சான்றாக, அறிக்கையில் முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 2020-இல் இந்திய மக்கள்தொகையில் 26 வயதுக்குள் 60 கோடி பேர் இருப்பார்கள்; உலகின் இளமையான நாடாக 29 வயதுடையவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். நிகழ்காலம் மற்றும் எதிர்காலச் சவால்களைச் சமாளிக்கும் வகையில் இந்திய மாணவர்களுக்கான புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக கொள்கை அறிக்கை அளித்துள்ள கஸ்தூரிரங்கன் தெரிவித்துள்ளார்.
 ஒரு மாணவர் பலமொழிகளைக் கற்றால்தான் சாதனையாளராக ஆகலாம் என்றும் அறிவை எளிதில் பெறலாம் என்றும் எதையும் விரைவில் கற்கலாம் என்றும் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறலாம் என்றும் உலக நாடுகள் கண்டறிந்துள்ளன என்று கல்விக் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளன (5 . 4). ஆனால், இவற்றுக்கான சான்றாதாரங்கள் உலக நாடுகளின் பாடமொழிக் கொள்கைகளில் காணக் கிடைக்கவில்லை.
இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தொடக்கக் கல்வியில், அதாவது ஐந்தாம் வகுப்புவரை ஒரு மொழியும் ஆறாம் வகுப்பிலிருந்து இரண்டாவது மொழியும் கற்றுத் தரப்படுகின்றன. அமெரிக்காவில் ஆங்கிலம், ஸ்பானிஷ் அல்லது மாணவர் விரும்பும் இன்னொரு மொழியும் ஜப்பானில் ஜப்பானிய மொழியும் ஆங்கிலமும் ஹாங்காங்கில் ஆங்கிலம் மற்றும் சீன மாண்ட்ரின் மொழியும் எகிப்தில் அராபிக் மொழியும் ஆங்கிலமும் கற்றுத் தரப்படுகின்றன. உலகம் முழுதும் சில காலனிய நாடுகளைத் தவிர, தொடக்கக் கல்வியில் ஒரு மொழியும் நடுநிலைப் பள்ளியில் இரண்டாவது மொழியும்தான் கற்றுத் தரப்படுகின்றன என்று இந்திய மக்கள் மொழி ஆய்வுத் தலைவர் ஜி.என்.டேவி தெரிவித்துள்ளார். 
ஆனால், இந்தியாவில் மூன்று மொழிகள் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது . மூன்று மொழிகளில் முதல் மொழியாகத் தங்கள் தாய்மொழி இடம்பெறாத மாணவர்கள் அதனையும் சேர்த்து நான்கு மொழிகளைக் கற்க வேண்டியிருக்கும். மேலும், குழந்தைகள் இரண்டு வயது முதல் எட்டு வயதுவரை பல மொழிகளைக் கற்கும் ஆற்றல் இயல்பாகவும் எளிதாகவும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதனால், மழலையர் கல்வி முதலோ முதல் வகுப்பிலிருந்தோ மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
ஆனால், உலகக் கல்வி நிலையைப் பற்றிக் கண்காணிக்கும் யுனெஸ்கோ அமைப்பின் 2016-ஆம் ஆண்டு அறிக்கை, ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது. அதில் இந்தியாவில் நான்கு கோடியே எழுபது லட்சம் பேர் பத்தாம் வகுப்பில் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதைவிட அதிர்ச்சிதரும் செய்தி, அவ்வாறு இந்தியாவில் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனதற்கான காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். பெற்றோர் பொருளாதாரநிலை, கழிவறை போன்ற அடிப்படை வசதியற்ற பள்ளிகள், குறிப்பாகப் பெண்களுக்கான பண்பாட்டுச் சூழல், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றோடு மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் பாடமொழிச் சுமையும் முக்கியக் காரணமாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் திறனை வளர்த்தெடுப்பதில் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் மொழிப் பிரச்சினையை நவீனத் தொழில்நுட்பம் தீர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், வங்காளம், இந்தி, அராபிக் ஆங்கிலம், சீனம் என்று இந்திய உலக மொழிகளில் 103 மொழிகளுக்கு கூகுள் மொழிபெயர்ப்பு செயலி உடனடி மொழிபெயர்ப்பு தருகிறது. நமக்குப் புரியாத மொழி பேசுவோரோடு செல்லிடப்பேசியில் அவரவர் மொழியில் பேசினால் அடுத்தவர் மொழியில் அவருக்கு மொழிபெயர்த்து உடனுக்குடன் சொல்கிறது.
ஜப்பானில் வாங்கிய ஒரு பொருளின் பயன்பாட்டு குறிப்பு ஜப்பானிய மொழியில் இருந்தால், அந்த மொழி புரியாத எழுத்துகளைப் படமெடுத்துப் போட்டால் நமது மொழியில் பெயர்த்துத் தருகிறது. நமது மொழியில் கையால் எழுதிக் காட்டினால் அடுத்தவர் மொழியில் பெயர்த்துச் சொல்கிறது. இப்படி உலகத்தில் மொழித்தடைகளைத் தொழில் நுட்பம் உடைத்தெறிந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்தியா போன்ற நாட்டில் வாழும் ஒரு குழந்தைக்கு மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்தால்தான் வளர்ச்சி என்று வாதாடுகிறவர்கள், பன்மொழிச் சூழல் மிக்க இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி மொழி மட்டுமே போதும் என்று வாதாடுவதில் தர்க்க விதிகள் முரண்படுகின்றன. ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இங்கே யாரும் யாரையும் தடைசெய்ய முடியாது.
 அரசாங்கத்தின் கடமையாக மட்டும் கல்வி இல்லை. தனியார் முயற்சிகளை அரசு ஊக்கப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட மொழியைக் கற்றுக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டிய தேவைகள் குறைந்துவிட்டன. மேலும் இன்னொரு மொழியை ஒருவர் கற்றுக்கொள்ள அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமும் இப்போது இல்லை. விரும்புகிறவர்கள் விரும்பும் மொழியை வீட்டிலிருந்தே, செல்லிடப் பேசி வழியாகவே இணையவழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் தொழில்நுட்பம் வழங்கி இருக்கிறது.
இனிவரும் காலத்தில் மொழி வளர்ச்சி என்பது வளரும் தொழில்நுட்பத்தில் தங்கள் மொழியை இணைப்பதுதான். ஆகவே, இப்போது நமது மொழிக்கொள்கை என்பது நவீனத் தொழில்நுட்பப் புரட்சியை உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமே தவிர, கடந்த காலப் பகைமைக்குள் வாழக் கட்டாயப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது.
எனவே, எதிர்கால இந்தியாவை உருவாக்கும் நோக்கத்திற்கோ, உலகின் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்தெடுப்பதற்கோ, இந்திய ஒற்றுமையை வளர்த்தெடுப்பதற்கோ  புதிய தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெறும் மொழிக்கொள்கை உதவும் என்பதை ஆட்சியாளர்களின் அதிக ஆசையும் நம்பிக்கையும் தான் தெரிவிக்கின்றனவே தவிர, ஏற்றுக் கொள்வதற்கான அறிவியல் உளவியல் தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, புதிய கல்விக் கொள்கை என்பது இந்திய மொழிகள் தன்மானத்தோடு வாழவும்  இந்தியர்களிடம் இருக்கும் மொழிப்பகையை மாற்றவும் உதவிடும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். 


கட்டுரையாளர்:
மேனாள் துணைவேந்தர், 
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com