மறக்க முடியுமா?

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 17-ஆவது மக்களவைக்கான தேர்தல் திருவிழா முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் புதிய ஆட்சி விரைவில்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 17-ஆவது மக்களவைக்கான தேர்தல் திருவிழா முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் புதிய ஆட்சி விரைவில் பொறுப்பேற்க இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்தி "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று வெற்றி பெறும் கட்சிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஜனநாயகத்தை மேலும் கட்டமைத்து வலுவடையச் செய்கின்றன.  
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தவுடன், ஆங்கிலேயர்களின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் அரசியல் விடுதலை பெறத் தொடங்கின. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து பல ஆசிய நாடுகள் தப்பினாலும், அவற்றால் இன்றும் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க முடியவில்லை.  இதற்கு உதாரணமாக, இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானையும், இலங்கையையும் கூறலாம்.  கடந்த 71 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஜனநாயக நாடாக உலக அரங்கில் இந்தியா பீடுநடை போடுவதற்கு  நம் நாட்டு சுதந்திரப்  போராட்டக் கால தலைவர்கள் இட்டுத் தந்த அடித்தளம்தான் என்றால் மிகையில்லை.  
நேதாஜி சுபாஷ் சந்திர போûஸ இந்திய ராணுவப் படையினர் தங்கள் தனிப்பெரும் தலைவராகவும் வீரத் தளபதியாகவும் ஏற்றுக் கொண்டு தங்கள் நாட்டை விடுவிப்பதற்கு வீறு கொண்டு எழுந்தனர். இந்த நிகழ்வு இந்திய மக்களின் சுதந்திரப் போராட்டக் களத்தில் புதிய பாதையை வகுத்துக் கொடுத்தது. காலனி ஆட்சிக்கால விளைவுகளை அகற்றி வருங்காலப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணி அன்று முதல் நாட்டின்முன் நின்றது.
காலனி ஆட்சி ஒடுக்கு முறை ஏறத்தாழ 200 ஆண்டுகள் நீடித்தது; எனினும், இந்திய மக்கள் இன்றும் தங்கள் பண்பாட்டு வளர்ச்சியில் மரபுத் தொடர்பை காத்து வருவதற்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகள்தான் அச்சாரம். இந்த நிகழ்வு அடிமை வாழ்வின் அவலத்தை எடுத்துக்காட்டியதோடு பல்வேறு இனங்களாக சிதறிக் கிடந்த இந்தியர்களை ஒரே தேச இனமாக உணரச் செய்தது.
கடந்த 71 ஆண்டுகளாக சுதந்திரக் காற்றை சுவாசித்து வந்த நாம், நம் இனிய சுதந்திரத்துக்காக நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்  தலைவர்கள் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து, ஜாதி, மத, மொழி வேற்றுமைகளைக் களைந்து அந்நிய ஆட்சியை அகற்ற ஒன்றுபட்டுப் போராடி வென்றதாலேயே இன்று நாம் தேர்தல் திருவிழாவில் பங்கு கொள்ள முடிகிறது.  இவ்வாறு தியாகப் போர் புரிந்து, ஆங்கிலேயர் ஆட்சியை ஒழித்து சுதந்திரத்துக்கு அச்சாரமிட்டுக் கொடுத்த  ஓர் அரிய நிகழ்வை நாம் மறந்துவிட்டோம்.
இந்தத் தேர்தல் திருவிழாவின்போது, கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதியன்று மணிப்பூர் மாநிலம் மொய்ரங்கில் இந்திய தேசிய ராணுவப் படையின் மொய்ரங் தினத்தின் 75-ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. 14.4.1944 அன்றுதான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ஆசாத் ஹிந்த் அரசு,  மணிப்பூர் மாநிலத்திலுள்ள மொய்ரங் மற்றும் நாகலாந்து மாநிலத்தின் பல பகுதிகளை ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசின் பிடியிலிருந்து கைப்பற்றியது.  ஆங்கிலேயர்கள் சந்தித்த மிகக் கடுமையான போர்களில் இதுதான் மிகக் கடினமான போர்  என பிரிட்டிஷ் அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது.  மேலும், இதுதான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியா சந்தித்த முதல் வெற்றி.
 ஒவ்வொரு ஆண்டும் மணிப்பூர் மாநிலம் மொய்ரங்கில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்த அரிய வெற்றி,  சம்பிரதாயமாக  ஒரு சிறிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் முரசு கொட்டி வென்ற இந்த மாபெரும் வெற்றியை  "மொய்ரங் திருநாள்' என்றோ, "வெற்றித் திருநாள்' என்றோ கொண்டாடியது இல்லை. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆண்டுதான் மத்திய அரசு 14.4.1944 அன்று அடைந்த வெற்றியை  "வெற்றித் திருநாள்' என அறிவித்து, ஆஸாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு விழா பிரதமர் மோடி தலைமையில் தில்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.  
இந்தியாவின் கிழக்கு எல்லையான மணிப்பூர் மாநிலம் மொய்ரங் என்னுமிடத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் 14.4.1944 அன்று பிரிட்டிஷ் படைகளுடன் போரிட்டு வெற்றியை நிலைநாட்டியதன் வெற்றி விழா கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதியன்று எளிய முறையில் கொண்டாடப்பட்டது. 14.4.1944 அன்றுதான் இந்திய தேசிய ராணுவத்தின் கர்னல் ஷெளகத் அலி மாலிக், நமது புனித மூவர்ணக் கொடியை மொய்ரங்கில் ஏற்றி வைத்து பிரிட்டிஷ் ராணுவத்தின் மீதான நமது வெற்றியை உறுதிப்படுத்தினார்.
ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசின் பிடியிலிருந்து ஒரு பாகம் அன்று விடுவிக்கப்பட்டது.   இந்த வெற்றியைத் தொடர்ந்து   இந்திய தேசிய ராணுவப் படையைச் சேர்ந்த  மைரேம்பாம் கொய்ரங் சிங் என்பவர் ஹிந்த்  ஆசாத் அரசாங்கத்தை நிர்மாணித்து மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சாட்டர்ஜியை ஆளுநராக நேதாஜி நியமித்தார்.  இந்த வெற்றிதான் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா விடுதலை அடைவதற்கு  பெரிதும் பயன்பட்டது. 
இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையிடமாக 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்தக் கட்டடம் இன்றும் மொய்ரங்கில் விடுதலைத் தழும்புகளைத் தாங்கிக் கொண்டு  அருங்காட்சியகமாக பெருமையுடன் நிற்கிறது.  இதன் அருகில்தான் இந்திய தேசிய ராணுவப் படை வீரர்களால் புனித மூவர்ண தேசியக் கொடி, பிரிட்டிஷாரின் எதிர்ப்பையும் மீறி ஏற்றப்பட்டது. இந்தச் செய்தி காதில் விழுந்ததும், இந்தியர்களின் இதயங்கள் அலைகடலென பொங்கின. 
1942-ஆம் ஆண்டு "விடுதலைப் படை' என்ற அமைப்பு சுதந்திர தாகம் கொண்டவர்களால் தொடங்கப்பட்டது.  இந்த அமைப்பில் இராஷ் பிகாரி போஸ் மற்றும் கேப்டன்  மோகன் சிங்  ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.  இராஷ் பிகாரி  போஸ் விடுத்த அழைப்பை ஏற்று  இந்திய தேசிய ராணுவத்தின் பிரதம தளபதியாக சுபாஷ் சந்திர போஸ் 1943-ஆம் ஆண்டு  ஜூலை  4-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டவுடன்  இந்திய தேசிய ராணுவப் படைக்கு புதிய ஊக்கமும், உத்வேகமும் கிடைத்தது. அது முதல் அவர் "நேதாஜி' என்று அழைக்கப்பட்டார்.
தென் கிழக்காசியாவில் வாழும் இந்தியர்கள், இந்திய தேசிய ராணுவத்தின் கொள்கையை ஏற்று அதன் பின் திரண்டனர். இதன் வலிமையும், செயலூக்கமும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரிட்டிஷ் பேரரசையே அசைத்துப் பார்த்தது.  மிகச் சிறந்த பேச்சாளராகவும், போராட்ட குணமும் கொண்டிருந்த சுபாஷ் சந்திர போஸின் வரவு, இந்திய ராணுவப் படைக்கு  புதிய பரிமாணத்தையும், உற்சாகத்தையும் அளித்தது. இந்தியப் போராட்ட  தீபத்தை ஒளி மங்காமல் வைத்த பெருமை நேதாஜிக்கு உண்டு.   
இந்திய தேசிய ராணுவப் படை 60,000 வீரர்களுடன் போர்க் கைதிகள் என்ற பெயரில் இந்திய மண்ணைக் கைப்பற்ற முனைந்த அயல்நாட்டினரை விரட்ட வேண்டும் என்பதற்காக, தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த அனைவரும் ஒன்றுபட்டு தாய்த் திருநாட்டின் விடுதலைக்காகப் போராடினர். இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக பலர் தங்கள் வாழ்க்கையை இழந்தனர்.
இந்திய தேசிய ராணுவப் படையில் மதம், மொழி, இனம் என்ற பாகுபாடின்றி அனைவரும் இணைந்து இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் போராடினர். அவர்கள் தங்களை இந்தியர்கள்/பாரதியர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இன்று இந்தியா ஒன்றுப்பட்ட தேசமாக இருப்பதற்கு,  இந்திய தேசிய ராணுவப் படைதான் காரணம்.  
இந்த ஆண்டு  இந்த மாபெரும் வெற்றியின் 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக, இனி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி மொய்ரங்கில் வெற்றித் திருநாளாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இயற்கை வளங்களை மட்டும் கொள்ளையடிக்கவில்லை, இந்திய மக்களின் உழைப்புத் திறனையும் கொள்ளையடித்தனர்.  கத்தியின்றி ரத்தமின்றி நாம் விடுதலை பெறவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் சிந்திய ரத்தம்தான் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு உரமானது.  
"விடுதலை என்பது திடீரென்று எதிர்பாராமல் மக்களுக்குக் கிடைப்பதில்லை.  விடுதலைக்காக மக்கள்தான் போராட வேண்டும். அந்தப் புனிதத்தை அடைவதற்கு முன்பாக, விடுதலை குறித்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்' என்றார் சார்லஸ் காளப் கால்டன் என்னும் எழுத்தாளர். இந்தப் பொன்மொழி இந்திய நாடாளுமன்றத்தின் வடபகுதி வாயிலிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
நம் மகாகவி பாரதியாரும், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, "ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே;  ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு  - நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு' என்று முழங்கினார். 
சுதந்திரம் என்பது சும்மா வந்துவிடவில்லை. ஏராளமான தலைவர்களின் உயிர்த் தியாகத்துடன் கலந்திருக்கிறது.வாழ்க பாரதம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com