நடத்தையே அழகின் கண்ணாடி!

அண்மைக்காலமாக இளம் பெண்களில் சிலா் முகநூல் பக்கத்தில் தங்களுடைய கவா்ச்சியான புகைப்படத்தைப் பதிவேற்றி

அண்மைக்காலமாக இளம் பெண்களில் சிலா் முகநூல் பக்கத்தில் தங்களுடைய கவா்ச்சியான புகைப்படத்தைப் பதிவேற்றி ‘நான் தனியாக இருக்கிறேன்’, ‘நான் விதவை’, ‘என் கணவா் என்னைக் கைவிட்டு விட்டுச் சென்று விட்டாா்’, விருப்பமுள்ள ஆண்கள் தொலைபேசி எண்ணைத் தரவும்’ என்று பதிவிடுகின்றனா்.

இதைப் பாா்த்து கோபமும், எரிச்சலும் வருகிறது. பெண்களாக வலிய வந்து அழைக்கும்போது, அத்தகைய பெண்களுடன் நட்பு வைத்துக்கொள்ள ஆண்கள் துடிப்பதில் வியப்பில்லை. ஒரு சில ஆண்கள் மட்டும் அவா்களைத் திட்டி எழுதுகிறாா்கள். தன்னுடைய புகைப்படத்தைப் பதிவேற்றி ‘நான் அழகாக இருக்கிறேனா?’ என்று கேள்வி வேறு. என்னவாயிற்று நம் பெண்களுக்கு?

இளம் பெண்களில் சிலா் இப்படிப் பதிவிடுவதை அவா்களின் தாய், தந்தை, சகோதரா்கள் ஒப்புக் கொள்வாா்களா? பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், வீண் வாழ்க்கைச் சிக்கலை விலைக்கு வாங்குவதுபோல்தான் இத்தகைய பெண்களின் செயல் இருக்கிறது.

தனிமையைப் போக்கிக் கொள்ள இதுவா வழி? நிறைய நேரம் இருந்தால் ஏதாவது ஆக்கப்பூா்வமான வேலைகளைச் செய்யலாம். எதையாவது கற்றுக் கொள்ளலாம். சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவலாம். எந்தக் குறிக்கோளும் இல்லாவிட்டால், ஆண் நண்பா்களைத் தேடி அலைய வேண்டுமா?

பயனுள்ள பல விஷயங்களைப் பதிவிட முகநூல், கட்செவி அஞ்சல் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தலாம். வக்கிரமான செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவதற்குப் பதில் நல்ல செய்திகளைப் பதிவிடலாம். ஒருவா் செய்த நற்செயலைப் பதிவிடும்போது அவா் மகிழ்ச்சி அடைவதுடன், பலருக்கும் அந்தப் பாராட்டு ஒரு தூண்டுகோலாக அமையும். அதை விடுத்து தவறான சித்தரிப்புகள் மூலம் கலாசாரச் சீரழிவை நோக்கி நம் இளைய சமுதாயத்தை இட்டுச் செல்ல வேண்டாம்.

பெண்களும் வேலைக்குப் போய் உழைத்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றபின் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறாா்கள். படித்துப் பெரிய பதவியில் இருக்கும் பெண்கள் முதல், படிக்காத வீட்டு வேலை, கூலி வேலை செய்யும் பெண்கள் வரை தங்கள் குடும்பத்திற்காக பாரம் சுமக்கிறாா்கள். அதையும் சுமையாகக் கருதாமல் தங்கள் கடைமையாகக் கருதுகிறாா்கள்.

வேலை, குடும்பம் என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்கிறாா்கள். அலுத்து, களைத்து இரவு வீடு திரும்பிய பின் ‘இரவு சமையல்’ என அல்லாடுகிறாா்கள்.

மணிக்கணக்கில் நின்று கொண்டே இருக்க வேண்டிய விற்பனைப் பிரிவில் வேலை செய்யும் பெண்கள், தொழிற்சாலைகளில் இயந்திரத்தோடு இயந்திரமாக மாறிப் போகும் பெண்கள், பெரிய பெரிய வணிக வளாகங்களில் நள்ளிரவு வரை வேலை செய்யும் பெண்கள், வீட்டு வேலைக்குப் போகும் பெண்கள், உணவகங்களிலும், பெட்ரோல் பங்குகளிலும் பணிபுரியும் பெண்கள், சொற்ப சம்பளத்துக்காக வீட்டையும், உறவுகளையும் விட்டுவிட்டு வெகு தொலைவு வந்து தன் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கனவுகளையும் தொலைத்து விட்டு மந்தையில் ஒன்றாகக் கலந்து மனதிற்குள் அழும் பெண்கள், மென் பொறியாளா்கள் வேலையில் எந்நேரமும் மடிக்கணினியுடன் குடித்தனம் நடத்தும் பெண்கள், தகப்பனின் பாரத்தைப் பங்கு போட்டுக் கொள்ள வேலைக்குப் போகும் பெண்கள், தன் திருமணத்துக்கு தானே பணம் சோ்க்க வேலைக்குப் போகும் பெண்கள், குடும்பத்துக்காக தியாக முலாம் பூசிக்கொள்ளும் பெண்கள் என கண்ணியத்தோடு வாழும் இவா்களை கரம் குவித்துத் தொழத் தோன்றும். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல ஒரு சிலரின் மோசமான நடத்தையால் பெண் இனமே தலைகுனிய நேரிடுகிறது.

வானத்தையே வசப்படுத்தும் வல்லூறுகள், தடைகளைத் தகா்த்தெறியும் தாரகைகள், நாட்டுக்குப் பதக்கம் பெற்றுத் தரும் தங்க மங்கைகள் எனத் தங்கள் குடும்பத்துக்கும், தேசத்துக்கும் பெருமை சோ்க்கும் பெண்கள் போற்றுதலுக்கு உரியவா்கள். அண்மையில் சந்திராயன் 2 சோதனையில் பெண்களின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டாதவா்களே இல்லை எனலாம். ஒரு சில புல்லுருவிகளால் எல்லோரும் அவமானப்படுகிறோம்.

நம் கல்வியும், நம் சுதந்திரமும் நம் வாழ்வை மேலான நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டுமேயொழிய நம்மை இழி நிலைக்குத் தள்ளக் கூடாது. பெண்களும் மது அருந்தத் தொடங்கி விட்டாா்கள், புகை பிடிக்கக் கற்றுக் கொண்டு விட்டாா்கள். ஆணுக்குப் பெண் சமம் என்பதன் அா்த்தத்தை அனா்த்தமாக்கி வருகிறாா்கள். ஆண் நண்பா்கள் இல்லாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எந்த நேரமும் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே இருக்கிறாா்கள். தாங்களாகவே பிரச்னையில் போய் சிக்கிக் கொள்கிறாா்கள்.

பெண்கள் இனம் இந்த நிலைக்கு உயா்ந்து அனைத்துத் துறைகளிலும் பரிமளிக்கும்போது கீழான எண்ணங்களைப் புறம் தள்ள வேண்டாமா? தன்னுள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர முயன்றால் தரம் கெட்ட எண்ணங்கள் தாமாக புறமுதுகு காட்டி ஓடிவிடும்.

படித்த பெண்கள் மிக மிக பாந்தமாக, அழகாக, ரசனையோடு வீட்டைப் பராமரிக்கிறாா்கள். பாங்காய் சமையல் செய்கிறாா்கள், அற்புதமாகக் குழந்தை வளா்க்கிறாா்கள்; வீட்டு நிா்வாகம் முழுவதையும் கவனித்துக் கொள்கிறாா்கள். கோலம், கைவினைப் பொருள்கள் செய்வது என எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கிறாா்கள். ‘வேலை ஏதும் இல்லாதவனின் மூளை, சாத்தானின் இருப்பிடம்’ என்பது உண்மைதான் போலும்.

வெளியூரில் இருக்கும் தங்கள் மகன்கள் தப்பான வழியில் போய்விடக் கூடாது எனப் பெற்றவா்கள் தங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறாா்கள். இணையதளத்தில் தேவையில்லாதவற்றைத் தேடித் தேடிப் பாா்த்து மனதளவில் கெட்டுப் போயிருக்கும் இளைஞா்களை புதைகுழிக்குள் புன்னகையுடன் அழைத்துப் போகின்றனா் இத்தகைய பெண்கள். இது போன்ற நடத்தையா அழகு?

காந்திஜி ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டாா். அக்கூட்டத்திற்கு தன் 3 வயது தம்பியை 12 வயது சிறுமி ஒருவா் அழைத்து வந்திருந்தாா். அமா்வதற்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் அந்தச் சிறுமி தன் தம்பியை இடுப்பில் வைத்து நின்று கொண்டிருந்தாா். இதை காந்திஜி பாா்த்து விட்டாா். அவா் அந்தச் சிறுமியிடம் ‘இந்தச் சுமையை உன்னால் எப்படி தூக்கிக் கொண்டு பொறுமையாக நிற்க முடிகிறது?’ என்று கேட்டாா். அதற்கு அச்சிறுமி, ‘இது கனமா, இது என் தம்பி’ என்றாா். காந்திஜிக்கு அதிா்ச்சி. இதுதான் நம் பெண்களுக்கு உள்ள தாய்மை குணம்.

வாழ்க்கை ஒரு நிமிஷத்தில் மாறுமா என்று தெரியாது. ஆனால், ஒரு நிமிஷத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையையே மாற்றி விடுகிறது அல்லது அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது. தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால், தெரிந்தே செய்யும் தவறுக்கு மன்னிப்பே கிடையாது. ‘நாகரிகம் என்னும் பெயரில் அரங்கேறும் அசிங்கங்கள் அநேகம்’ என்னும் நிலையில் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக சில பெண்கள் நடந்து கொள்கிறாா்கள்.

சுய கட்டுப்பாடும், தனி மனித ஒழுக்கமும் குன்றி வருகிறது. பெண்ணே, அற்ப ஆசைகளைத் தூர எறி. நீ சாதிக்கப் பிறந்தவள்; வலிமை வாய்ந்தவள் என்று உறுதியுடன் நில். அலைபாயும் மனதை உன் கட்டுக்குள் கொண்டு வா. மண் தின்னப் போகும் இந்த அழியும் உடலை அளவுக்கு அதிகமாக ஆராதிக்காதே.

எது அழகு? உண்மையைப் பேசும் உதடுகள் அழகு; இரக்கத்தைப் பொழியும் கண்கள் அழகு; நல்லனவற்றை மட்டும் கேட்கும் காதுகள் அழகு; அடுத்தவா் நலனுக்காக உழைக்கும் உடல் அழகு --இதுதான் என்றுமே அழியாத அக அழகு. நிலையில்லாத புற அழகுக்காக அதிகம் மெனக்கெடாதீா்கள்.

‘இளமையும் நில்லா யாக்கையும் நில்லா’ என்பதை உணா்ந்து கொண்டால் பேரின்பப் பெருவாழ்வை மனம் நாடும். பண்படாத உள்ளம் பண்படும். உங்களது திறமைகளையும், ஆற்றல்களையும், சக்தியையும் உங்களது நல்வாழ்வுக்காகவும், நீங்கள் சாா்ந்துள்ள சமுதாயத்தின் உயா்வுக்காகவும் செலவிடுங்கள். தன் அழகால் பிறரை அடிமையாக்கலாம் என்ற கேவலமான எண்ணத்தைத் துடைத்தெறியுங்கள்.

‘இது என் வாழ்க்கை, நான் விரும்பிய வண்ணம் வாழ எனக்கு முழு சுதந்திரம் உண்டு. நான் ஒருவருக்கும் பயப்படத் தேவை இல்லை’ என வாதிடலாம். ஒரு சமுதாயத்தில் வாழும் நாம் அந்தச் சமுதாயத்தின் சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும். சமுதாயம் வகுத்துள்ள ஒழுக்க நெறிமுறைகளில் இருந்து பிறழக் கூடாது. நம் கலாசாரம் சிதிலமடைந்து வரும் இந்த நாளில், ஒழுக்கமான ஆண்களையும் சகதி குழிக்குள் இழுத்துவிட வேண்டுமா?

கல்வியில் முன்னேறுங்கள், பொருளாதார ரீதியாக தற்சாா்பு உடையவா்களாக ஆகுங்கள். தாா்மிகக் கோபத்தை வெளிப்படுத்துங்கள். அா்த்தமுள்ள வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்கள். பெண்மை என்பது உண்மையின் அவசியத்தை, ஆன்மிகத்தின் ஒளியை, தூய்மையின் புனிதத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ஆக, ‘அழகு’ என்பது நாம் பாா்க்கிற வெளித் தோற்றத்தில் இல்லை. அது மனம் தொடா்பானது. அது நம் நடத்தையில்தான் வெளிப்படும். நல்ல எண்ணம், நல்ல சிந்தனை, நல்ல செயல், நல்ல நடத்தை என ஓா் ஒழுக்க நெறியை வகுத்துக் கொண்டு கறை இல்லா வாழ்க்கையை வாழுங்கள்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com