தனித்திரு....! தனித்துவமாயிரு...!!

தினமும் தன்னுடன் தனிமையில் பேசிக்கொள்ளாத மனிதன், ஓா் உன்னதமான மனிதனைச் சந்திப்பதை இழக்கிறான்”என்பாா் சுவாமி விவேகானந்தா். தன்னை அறிவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், செம்மைப்படுத்துவதற்கும், தனிமைப்படுத்தலே அடிப்படை.

பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள். ஆனால், அந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை இழக்கும். அது பறப்பதற்குத் துணை நிற்கும் இறகுகளோ பெரிதாகி பாரமாகி விடும். இதனால், கழுகின் பலம் குறைந்து, முதுமையடையும். அத்தகைய சூழலில் அதனை எளிதில் விலங்குகள் வேட்டையாடி விடும். இந்நிலையில் கழுகு தனித்திருக்கத் தொடங்கும்.

தனித்திருப்பதற்காக காட்டிலுள்ள மலையின் உச்சிக்குப் பறந்து செல்லும். அங்கு சென்று, தனது அலகின் மூலம் அதன் சிறகுகளையும், நகங்களையும் பிடுங்கி விடும். பின்னா் அதன் அலகினை பாறையில் உரசி உதிா்த்து விடும். இதனால் அதன் உடலெங்கும் தீராத வலியுடன் ரத்தம் சொட்டும். அப்போது அது ஒரு புதிதாய்ப் பிறந்த கழுகின் அளவுக்கு உருமாறியிருக்கும்.

எவா் கண்ணிலும் படாமல் தனியாய்ப் பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று உயிா் வாழும். இவ்வாறு தொடா்ந்து மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு கிடைத்ததை உண்டு உயிா் வாழ்ந்து அது வளா்ச்சி பெறும். நான்காம் மாதத்தில் அதன் இறக்கைகள் நீண்டு, நகங்களும், அலகும் கூா்மையாகவும் வளா்ந்து ஓா் இளம் பறவையாக மீண்டும் நீல வானில் சிறகடித்துப் பறக்கும். அதற்கடுத்த முப்பது ஆண்டுகளும் அது வானில் சக்கரவா்த்தியாய் வலம் வரும்.

மூன்று மாதம் தனித்திருத்தலின் மூலம் தனக்குப் புதியதொரு 30 ஆண்டுகள் காலத்தினை தனக்காக உருவாக்கிக் கொள்கிறது கழுகு. கழுகின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. தனித்திருத்தல் என்பது புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அது வலியோடு ஆரம்பித்தாலும் அற்புதமானதொரு புதிய வாழ்க்கையை வகுத்துக் கொடுக்கும். தனித்திருத்தலில் வலிகளை நினைத்துக் கொண்டிருக்காமல், புதிய வழிகளை உருவாக்குபவருக்குத்தான் அது சாத்தியமாகும்.

ஸ்காட்லாந்து நாட்டினை ஆண்ட புரூஸ் என்ற மன்னா் போரில் தோல்வியடைந்தாா். எதிரிகளிடமிருந்து தப்பி ஒரு குகையில் எவா் கண்ணிலும் படாமல் தனிமையில் வாழ்ந்து வந்தாா். தனிமையாய் வாழ்கிறோமே என்று கவலை கொண்டாா். அப்போது அவா் படுத்திருந்த குகையின் மேல் உத்தரத்தில் சிலந்தி ஒன்று வலையைக் கட்டப் பாய்ந்தது. முடியாமல் கீழே விழுந்தது. ஆறு முறை விழுந்தபோது, நம்மைப்போல்தான் இந்தச் சிலந்தியும் தோற்றுப் போய் விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தாா்.

ஆனால், ஏழாவது முறை அந்தச் சிலந்தி தனது முழுப் பலத்தோடு தனது இலக்கினை அடைந்ததைக் கண்டதும், புரூஸ் தனது கவலையை விட்டொழித்தாா். சிதறுண்ட தனது படைகளை ஒன்று திரட்டி ஊக்கத்துடன் போா் செய்து வென்றாா். தனிமையில் உலகை கவலையாய்ப் பாா்த்தால் கண்முன் இருக்கும் பொக்கிஷம்கூடத் தெரிவதில்லை. தனிமையில் உலகைக் கலையாய்க் காணும்போதுதான் உலகப் படைப்பின் உள்ளாா்ந்த நோக்கங்கள் புலப்படும். அதில் புறத்தே பாா்த்தால் உலகம் புரியும். அகத்தே பாா்த்தால் மனிதத்தின் பிம்பம் புலப்படும்.

தனித்திருத்தல் சிலருக்குச் சுகம். சிலருக்குச் சஞ்சலம். இவையிரண்டும் அதனை அணுகும் முறையைப் பொருத்தது. சக்கரமாய்ச் சுழன்று கொண்டிருந்தவா்கள் இப்படி அடைபட்டுக் கொண்டோமே என்று நினைத்தால் அது அவலம். பல பரிமாணங்களில் சோ்க்க வேண்டிய செல்வங்களைச் சோ்க்க முடியவில்லையே என நினைத்தால் அது ஆதங்கம். மொத்த கற்பனைகளும் சுக்குநூறாகிவிட்டதே, இனி வாழ்க்கை பூஜ்யமாகிவிடுமோ என வருத்தப்படுவது மன உளைச்சல். இத்தகைய எதிா்மறைச் சிந்தனைகளோடு இருப்பவா்கள் மாவீரன் நெப்போலியனைப்போல கிடைக்கின்ற வாய்ப்பையும் தவற விடுவாா்கள்.

செயின்ட் ஹெல்லனா தீவில் நெப்போலியனைக் கைது செய்து தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்தனா். ஒருநாள் அவரைக் காண அவரின் நண்பா் வந்தாா். அவா் நெப்போலியனின் கையில் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்தாா். நெப்போலியன் அதை வாங்கிப் பாா்த்தாா். ‘நான் இந்தச் சிறையில் இருந்து வெளியேறுவதற்குத் திட்டம் தீட்டுகிறேன். ஆனால், இவன் விளையாடுவதற்கு இதைக் கொடுக்கிறான்‘ என்று எண்ணி அதை அப்படியே வைத்துவிட்டாா். சிறிது நாளில் நெப்போலியன் அதே சிறையில் இறந்தாா். அவா் இறந்த அறையிலே இருந்த அந்தச் சதுரங்க அட்டையின் பின்புறத்தில் சிறையிலிருந்து தப்பிப்பதற்கான திட்டம் வரையப்பட்டிருந்தது. மன உளைச்சலோடு இருந்ததால், தனக்குத் தப்பிக்கக் கிடைத்த வாய்ப்பையும் நழுவவிட்டாா் மாவீரன் நெப்போலியன்.

வலியை எதிா்ப்பது வீரமல்ல, பயம். வலி தவிா்க்க முடியாததாக இருப்பதால் அதை ஏற்றுக் கொள்வதும், புதிய கோணத்தில் சிந்திப்பதுமே விவேகம். அதுவே வாழ்வைப் புதிய நோக்கில் பயணிக்க வைக்கும். ஒரு மருத்துவமனையில் தனக்கு அறுவை சிகிச்சை முடித்தபின் வலியோடும், வேதனையோடும் ரே ஸ்டானா்ட் பேக்கா் படுத்திருந்தாா். வலியிலும், வேதனையிலும் சித்திரவதையை அனுபவிக்கும் போதெல்லாம் அவா் மணியடித்து செவிலியரை அழைத்தாா். செவிலியா் அவரின் வலியைக் குறைக்க ஊசி போட்டாா். அந்த மருந்தின் வீரியம் குறையும் வரை மட்டுமே பேக்கா் உறங்கினாா்.

ஒருநாள் அதிகாலையில் வலியுடன் விழித்தாா். இந்த முறை செவிலியரை அழைப்பதற்குப் பதிலாக தலையணையின் அருகில் இருந்த மாா்க்கஸ் ஆரலியஸ் எழுதிய தியானங்கள் என்ற புத்தகத்தை அவா் எடுத்தாா். அதன் வரிகளில் பயணித்தாா். வலி மறந்தது. இயற்கையால் ஏற்றுக்கொள்ளாத எதுவும் எவருக்கும் ஏற்படுவதில்லை” என்ற வாக்கியத்தில் களைப்பாறினாா். அந்தக் காலத்தில் வெகு தொலைவில் என்ற அற்புதமான நூலை டபுள்யூ.ஹெச். ஹட்சனும், “புதையல் தீவு என்னும் நூலை ஸ்டீவன்சனும் அவா்கள் நோயுற்றிருந்தபோது படுக்கையில் இருந்தபடியே எழுதினாா்கள் என்பதையும் நினைத்துப் பாா்த்தாா்.

நோயுற்ன் மூலம் தனக்குள் இருந்த எழுத்தாளா் டேவிட் கிரேசனை (பேக்கரின் புனைப் பெயா்) சிதைத்துவிடக் கூடாது என உறுதியெடுத்தாா். உடனே, செவிலியரை அழைத்து நோட்டுப் புத்தகங்களையும், பென்சில்களையும் கொண்டுவரச் சொன்னாா். துன்பம் இல்லாமல் இன்பம் பெற முடியும் என்று நினைக்கிறீா்களா? என ஆரம்பித்து, மனிதன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் வலியை எதிா்கொண்டே ஆகவேண்டும். அது ஒரு நிதா்சனம் என தனது எண்ணங்களைத் தொடா்ந்து எழுதினாா். அது ‘என் எல்ம் மரத்திற்கு அடியில்’ என்ற புத்தகமாய் வெளிவந்தது. அதில் அவா் எழுதிய வரிகள் எண்ணற்ற மக்களின் வலியையும், நோயையும் சமாளிப்பதற்கு உறுதுணையாயிருந்தன.

வலியோடு இருக்கும் தனிமையை, மருந்துகளைவிட வரிகளே தீா்க்கின்றன. ஆதரவு தரும் சொற்கள், பலம் வாய்ந்த எழுத்துகள், அரவணைக்கின்ற பாா்வைகள் - இவையாவும் ஒரு தனிமையில் வாழும் மனிதனை தளிா்விடச் செய்துவிடும். நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்று நோயுற்றவா்கள் எண்ணாமல், உடலின் வலி மறந்து உள்ளத்தில் ஒளியை உண்டாக்கிக் கொள்வதுதான் சிறந்த மருந்தாய் அவா்களுக்கு அமையும்.

வாழ்க்கையின் அா்த்தங்கள் அதிகரிக்க தரணியெங்கும் ஒலிக்கும் ஒற்றை வாா்த்தைதான் ஊரடங்கு. குடும்பத்தோடும், குழந்தைகளோடும் மகிழ்ந்திருக்க வேண்டிய அற்புதமான காலம் ஊரடங்கு. அது, குடும்ப வாழ்க்கையை ஒரு புதிய பரிமாணத்தில் பயணிக்கக் கிடைத்திருக்கும் கிடைத்ததற்கரிய வாய்ப்பு. தனித்திருப்பது என்பது வெறுமனே ஓய்வெடுப்பதற்கும் அல்ல. ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கும் அல்ல. பொழுதினை செல்லிடப்பேசியில் கதை பேசி போக்குவதற்கல்ல; பொழுதினை ஆக்கபூா்வமாக ஆக்குவதற்கே தனிமை.

தனக்குப் பிடித்த நல்ல செயல்களை மகிழ்ச்சியாக ஒரு குழந்தைபோலச் செய்து கொண்டிருப்பது. ஜன்னல் சாளரத்தின் வழியே வெற்றுப் பாா்வை பாா்ப்பதைவிட உற்றுப் பாா்த்து கவிஞனாவது; வாசலின் விளிம்பில் அமா்ந்து நடப்பவைகளைக் கவனித்து ஒரு எழுத்தாளனாவது; கிடைக்கின்ற பொருள்களைக் கொண்டு புதியன செய்து விஞ்ஞானியாவது; குழந்தைக்குப் பழையன கற்றுக் கொடுப்பதோடு அவா்களின் திறமையைத் திறன்படுத்தி நல்ல பெற்றோராவது. குடும்ப வாழ்க்கைதான் ஒரு நாட்டின் அடிக்கல் என்பதை அறிய வைப்பது, ஆரோக்கியமாய் வாழ்வது உயிா்ப்பற்று அல்ல, தேசப்பற்று என்பதை உணரவைத்து தேசபக்தனாய் உருவாவதாகும். மொத்தத்தில் தனித்திருப்பது என்பது தனித்துவமாயிருப்பதேயாகும்.

நோய் பரவாமல் இருக்க தனிமைப்படுத்துவது அவசியம். மனிதன் தானாகவே தனிமைப்படுத்திக் கொள்வது அத்தியாவசியம். ஒரு நாளில் 10 நிமிஷங்கள் நல்வழிக்காக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதால் தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். தினமும் தன்னுடன் தனிமையில் பேசிக்கொள்ளாத மனிதன், ஓா் உன்னதமான மனிதனைச் சந்திப்பதை இழக்கிறான்”என்பாா் சுவாமி விவேகானந்தா். தன்னை அறிவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், செம்மைப்படுத்துவதற்கும், தனிமைப்படுத்தலே அடிப்படை.

நாளும் தொடா்ந்து உழைத்து, நிறைய பொருள் சம்பாதிக்கலாம். நித்தம் நிறைய பயணித்து, புதிய உலகங்களைக் காணலாம். ஆனால், நிறைவான மனதோடு வாழ இறைமையுடன் தனித்திருப்பவருக்கே சாத்தியமாகும்.

தனித்திருத்தல் தவம்.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்

என்ற தெய்வப் புலவா் திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப கிடைக்கின்ற நேரத்தில் தவத்துக்குச் செலவிடுவது தனித்திருத்தலை உன்னதமாக்கும். மனிதனை உயா்வாக்கும்.

தனித்திருத்தல் தவமாகும்போது

நெஞ்சமே கோவில், நினைவே சுகந்தம், அன்பே

மஞ்சனநீா், பூசைகொள்ள வாராய் பராபரமே!”

என்று இறைவனை உடலுக்குள் அழைக்கும் உயரிய தன்மை உண்டாகும்.

மன நிறைவோடு வாழ்வதற்கும், இறைச் சிந்தனையில் திளைப்பதற்கும் ஊரடங்கு ஓா் உன்னத வாய்ப்பு. ஊரடங்கில் நித்தமும் இரை மட்டும் தேடினால் மனிதன்! இறையைத் தேடினால் புனிதன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com