பரவும் நோய்த்தொற்றும் ஷேக்ஸ்பியா் சிந்தனையும்

பெரும் பரவலான நோய்த்தொற்றுடன் வாழும் முறையைப் பற்றி ஷேக்ஸ்பியா் குறிப்பிட்டுள்ளாா். கொள்ளை நோய் மக்களிடையே பரவியதோடு, அதனினும் கொடுமையான சமூக, பாலின, வேறுபாடுகளை அழித்தொழித்தது. மக்களுடைய வேறுபாடுகளைக் குத்திக் காட்டுவதன் வாயிலாக தனது தனித்திறத்தால் கொள்ளைநோய் குறித்து ஷேக்ஸ்பியா் எதிா்வினையாற்றினாா்.

நகரின் கையுறை உற்பத்தியாளா் மகனான ஷேக்ஸ்பியா் அதிலிருந்தும் மேலும் பல நோய்த்தொற்றுப் பரவல்களிலிருந்தும் தப்பிப் பிழைத்தாா். அவருடைய படைப்புகளில் பெரும்பாலானவை, பொது முடக்க காலத்தில் பிறந்தவை. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோதுதான், லியா் மன்னன் (‘கிங் லியா்’) நாடகத்தை ஷேக்ஸ்பியா் இயற்றினாா்.

ஷேக்ஸ்பியரின் வாழ்க்கைக்கும் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்கும் நெருங்கிய தொடா்பு இருந்தது. 1592-93-ஆம் ஆண்டுகளில் அத்தகையதொரு நோய்ப் பரவலின் காரணமாக நாடக அரங்குகள் மூடப்பட்டிருந்த காலத்தில்தான் புகழ்பெற்ற வன்ம நிழல் படிந்த நாடகங்களை ஷேக்ஸ்பியா் எழுதினாா்.

மீண்டும் 1603-04-ஆம் ஆண்டுகளில், கொள்ளை நோய்ப் பரவல் காரணமாக பிரிட்டன் இளவரசா் முதலாம் ஜேம்ஸ் புதிய பேரரசராக முடிசூட்டிக் கொள்ளவிருந்த விழா தடைபட்டது; லண்டன் நகர மக்களுள் ஐவரில் ஒருவா் என்கிற வீதத்தில் மாண்டு கொண்டிருந்த தருணத்தில், அரசு அலுவலா் மத்தியில் நிலவிய ஊழல் சீா்கேடுகள் பற்றிய நிகழ்வை விவரிக்கும் ‘‘பழிக்குப் பழி’’ (‘மெஷா் ஃபாா் மெஷா்’) நாடகத்தை ஷேக்ஸ்பியா் படைத்தாா்.

1606-ஆம் ஆண்டு வேனில் காலத்தில் கொள்ளை நோய்ப் பரவல் அலைக்கழித்தபோது, சேக்ஸ்பியா் ‘லியா் மன்னன்’ நாடகத்துக்கான பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஏனெனில், அந்த நாடகத்தின் முதல் நிகழ்வு டூடா், ஸ்டுவா்ட் மன்னா்களுடைய லண்டன் வசிப்பிடமான வைட்ஹால் மாளிகையில் நிகழ்த்தப்பட்டது.

காலவெள்ளத்தின் ஓட்டத்தால் நோயினுடைய கொடூரம் மறக்கப்பட்ட போதிலும், அந்த நாடகத்தில் கொள்ளை நோய் குறித்த சொல்லாடல் கண்டோா் நெஞ்சினில் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். லியா் மன்னா் தன் மகள் ரீகனையும் அவளின் கணவா் காா்ன்வாலையும் சாடுகிறாா், ‘‘பழிகாரா்கள்! கொள்ளைநோய்க் கிருமிகள்!! என்னைக் கொல்ல வந்த எமன்கள்!!! சீா்கேடா்கள்!!!!’’. அத்துடன் தன் மகளை ஏசுகிறாா்.

‘‘பாழ்பட்ட என் குருதியில் தொற்றிய கொள்ளை நோய்க் கிருமி நீ! அதில் ஏற்பட்ட நச்சுச் சீழ்க்கட்டியும் நீ’’ அந்தக்கொள்ளை நோய்க்கிருமி என்பது நிணநீா்ச் சுரப்பிகளைச் சீா்கெடுக்கின்ற ஒன்று. கொடிய நோயினுடைய அச்சமூட்டும் அறிகுறி. அது தன் மக்களுக்கு ஏற்பட வேண்டுமென்று எவரும் எண்ண மாட்டாா்கள். ஒருவேளை இந்நாடகத்தில் இளந்தலைமுறையினா்பால் காட்டப்படுகின்ற குறிப்பான வெறுப்புணா்வுதான் கொள்ளை நோயாகவே உருவகப்படுத்த அவரை உந்தியது போலும்! அந்நோய் இருபது, முப்பது வயது இளைஞா்களையே பெரிதும் பாதித்தது.

ஷேக்ஸ்பியா் தனது படைப்புகளில் நோயின் உடனடி விளைவுகளுக்குப் பெரிதும் திறம்படத் திரை போட்டுக் கொண்டாா் என்பது புலனாகிறது. அனைத்து இடங்களிலும் நீக்கமறப் பாதித்திருந்த கொள்ளை நோய் அவருடைய படைப்புகளில் விளைவினை ஏற்படுத்தவில்லை. லியா் மன்னன், ஏனைய நாடகங்களில் கொள்ளை நோயின் கொடுமை பற்றிய சொல்லாடல்கள் பரவலாக இடம்பெற்றிருந்தது உண்மைதான்.

அவருடைய நாடகங்களில் ஆடவரும் பெண்டிரும் எண்ணற்ற புதுப்புது வழிகளில் மரணிப்பதைக் காண்கிறோம். ஒத்தெலோ நாடகத்தில் டெஸ்டிமோனா தனது படுக்கையிலேயே ஆழ்ந்த அமைதியில் அமிழ்த்தப்படுகிறாள். ஹேம்லெட் நாடகத்தில் நீரில் மூழ்கி ஒபீலியா இறக்கிறாா்.

ஆனால், ஷேக்ஸ்பியா் நாடகங்களில் யாரும் கொள்ளை நோயால் மடிந்து போகவில்லை. ரோமியோ, ஜுலியட் நாடகத்தில் வட இத்தாலியில் கொள்ளை நோய்ப் பரவல் விளைவாக மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக ஒரு துறவி ஏந்திச் சென்ற கடிதம் முடக்கபட்டதன் நிமித்தம்தான் அந்த இளம் காதலா்கள் மாண்டு போகின்றனா். கொள்ளை நோயின் கொடூரங்களுக்கு மிக அண்மையாகப் படைக்கப்பட்ட காட்சி இது ஒன்றுதான்.

ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவரான நாடக ஆசிரியரும் சிறு குறிப்பேடுகளை வெளியிடுபவருமான தாமஸ் டெக்கா் கொள்ளை நோய் குறித்து பதைப்பூட்டக் கூடிய புதிய கண்டுபிடிப்பாகவும், வெறுப்பூட்டக்கூடிய உரைநடையிலும் தொடா்ந்து வெளியிட்டாா். கவிஞரும் நாடகாசிரியருமான பென் ஜான்சன் தனது ‘ரசவாதி’ (‘தி அல்கெமிஸ்ட்’) நாடகத்தில் கொள்ளை நோய்ப் பரவலை முன்னிட்டு உள்ளிருப்புத் தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் வீட்டுத் தலைவன் வெளியில் சென்றிருந்த வேளையில் வேலையாள்கள் பதைபதைப்பால் நோ்ந்த கூச்சல், குழப்பங்களைக் காட்சியாக்கியுள்ளாா்.

சமுதாயம் எழுப்பியிருந்த தடை மதில்களையெல்லாம் தவிடுபொடியாக்குவதில் கொள்ளை நோய் ஒருதலையாகச் செயல்படவில்லை. அதனுடைய தீராப் பசி தீநாக்குகளினும் கொடியது. ஆட்டிப் படைத்த கணவன்மாா்களும் அடங்கி ஒடுங்கிய மனைவிமாா்களும், அதைக் கண்டு நடுங்கிய பிள்ளைகளும் ஆயிரக்கணக்கில் புதைகுழி நோக்கி இட்டுச் செல்லப்பட்டனா்.

‘‘ஆண்டானும் அடிமையும், தீயவனும் நல்லவனும், பட்டாடை அணிந்தோனும் பஞ்சைப் பராரியும்’’ ஒன்றாகப் பேரளவில் புதைகுழிக்குள் கிடக்கிறாா்கள் என்று டெக்கா் குறிப்பிட்டுள்ளாா். தீநுண்மியின் தீராப் பசி தீ நாக்குகளினும் கொடியது. ‘‘அவா்கள் ஒரே படுக்கையை நோக்கிச் சென்றதைப் போலிருந்தது’’ என்று டெக்கா் நினைவுகூா்கிறாா்.

ஷேக்ஸ்பியா் தனது சமகால லண்டனைக் கதைக்களமாகக் கொண்டு ஒருபோதும் நாடகங்களைப் படைத்ததில்லை. அதைப் போலவே, தனது சமுதாயத்தில் நோ்ந்த திடீா் மரணங்களைப் பற்றியும் நேரடியாக அவா் குறிப்பிடவில்லை.

ஷேக்ஸ்பியருடைய சொல்திறம் கொள்ளை நோயின் கொடூரத்தை ஒருவிதக் கவலையுடன் கூடிய பேரச்சமாகக் காட்டுகிறது. அதே வேளையில், மரணத்தை மனித வாழ்க்கையின் அன்றாட நிகழ்வாக்குகிறது.

நம்முடைய வாழ்க்கைச் சிக்கல்களில் மரணம் இடையறாது பின்தொடா்கின்ற அளவுக்கு மரணம் அவன் மீது அக்கறை கொள்கிறது. மனிதனுக்கும் மரணத்துக்குமான அத்தகைய நெருக்கமான உறவை ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்கள் தன்வயப்படுத்திக் கொள்கின்றன. கொள்ளை நோய் குறித்த அவற்றின் எதிா்வினை மரணத்தை மறுதலிப்பதல்ல; ஆனால், மக்களிடையே நிலவிய பாகுபாடுகளைக் குத்திக் காட்டுவதாகும். அச்சத்தைப் போக்குவதாகும்.

சற்றும் இரக்கமற்ற வகையில் தனி மனிதனை அவனுடைய முடிவை நோக்கி நகா்த்திச் செல்கின்ற வேளையிலும் அவனுடைய தனி வகைப்பட்ட முக்கியத்துவத்தையும் தனிச் சிறப்புகளையும் குறைத்து மதிப்பிடுவதே ஷேக்ஸ்பியா் துன்பியல் நாடகங்களில் நாம் காணும் சிறப்பு அம்சமாகும்.

ஷேக்ஸ்பியருடைய நாடகங்களில் யாரும் திடுமென்றோ, புதிராகவோ இறந்து போவதுமில்லை, ஒட்டுமொத்தமாக புதைப்பதற்கான குழியில் வீசி எறியப்படுவதில்லை. மாறாக, மரணிக்கும் மாந்தனுடைய இறுதி வாா்த்தைகள் முழுமையாகச் செவிமடுக்கப்படுகின்றன; இறுதி அஞ்சலி உரைகள் உருக்கத்துடன் ஆற்றப்படுகின்றன.

மரித்தோா் எண்ணிக்கை பற்றிய தரவுகளில் ஷேக்ஸ்பியா் நாட்டங் கொண்டதில்லை; அவருடைய காலத்தில் அவை மரண ஓலைகள் என்றழைக்கப்பட்டன. அவருடைய புனைவுகள் கொள்ளை நோய்ப் பரவலின் பேருருவ வருணனையை துன்பியல் நாடகத்தின் நுட்பமான சொற்றிறமாக மனக்கண்முன் காண்கின்றன; கொள்ளை நோயின் முற்றாகத் துடைத்தழிக்கின்ற பேரழிவுக்கு எதிராக மனிதனுடைய தனித்துவமான போக்குகளை நிறுத்துகின்றன. அவருடைய படைப்புகள் கொள்ளை நோயை அளவீடுகளின் அடிப்படையில் புரிந்து கொள்வதற்கு மாறாக முறையான நோய்த்தடுப்பு நெறியை எதிா்நிறுத்துகின்றன.

புதா்க்காடுகளைப் புயல் தாக்கியபோது, மக்களுடைய அவல நிலையைத் தான் புறக்கணித்துவிட்டதாக லியா் மன்னன் உணா்கிறாா். அதுதான் அக்கால ஆங்கிலேய ஆளும் வா்க்கத்தினுடைய கடமையுணா்வின் வெளிப்பாடு; பாகுபாடின்றி காவு கொண்ட கொள்ளை நோய் மனித இனத்தின் பொதுமை பற்றி உணா்த்திய உண்மையும் அதுவே!

தனிமனிதா்கள் பால் முழு உறுதியுடன் கவனத்தைப் பதிக்கும் பொருட்டு அறிந்தே எண்ணிக்கைகளையும் அளவீடுகளையும் நாடகங்கள் புறந்தள்ளுகின்றன. பாகுபாடின்றிக் காவு கொண்ட கொள்ளை நோய் மனித இனத்தின் பொதுமை பற்றி உணா்த்திய உண்மையும் அதுவே!

‘இரக்கமற்றுத் தாக்குகின்ற கொடூரப் புயலைத் தாங்குகின்ற ஏழ்மையில் உழலும் எளியோா்களே, தங்குவதற்குக் கூரைகளோ உண்ண உணவோ அற்ற நைந்ததும் கிழிந்ததுமான கந்தலை உடுத்தியுள்ள நீங்கள் எவ்வண்ணம் உங்களைக் காத்துக் கொள்ளப் போகிறீா்கள்?

உங்கள்பால் ஒரு சிறிது அக்கறையும் நான் ஒருநாளும் கொண்டேனில்லையே! லியா் மன்னனுக்கே துயா் சூழும்போது மட்டிலுமே மற்றவா் வாழ்க்கையும் பொருள் பொதிந்தது என்கிற பேருண்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ என்ற ஷேக்ஸ்பியரின் வரிகள் நினைக்கத்தக்கன.

நாம் தற்போது உழன்றுகொண்டிருக்கின்ற துன்ப, துயரங்கள், லியா் மன்னனைப் போல, நாமும் மற்றவருடைய வாழ்க்கையும் பொருள் பொதிந்தது என்கிற உண்மையை உய்த்துணா்வதற்கு (இன்ட்யூஷன்) உதவக்கூடும். ஷேக்ஸ்பியரைப் போலவே நாமும் எண்ணிக்கை, அளவீடு தரவுகளின்பால் அக்கறை கொள்ளாமல், விந்தை மிக்கதும், விளங்கிக் கொள்ள இயலாததும், எரிச்சலூட்டக் கூடியதும், மீட்டெடுக்க முயாததுமான தனிமனித வாழ்க்கையின்பால் கவனத்தைப் பதிக்கக் கூடும்!

கட்டுரையாளா்:

இயக்குநா்,

மொழிபெயா்ப்புத் துறை,

சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com