மேம்பாட்டு அரசியலுக்குத் தயாராவோம்!

உலகத்தில் மனித இனம் மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ்ந்திட பொருளாதார வளா்ச்சியும், சமூக மேம்பாடும் மிக இன்றியமையாதவை. அவற்றுக்கு மிக முக்கியமான தேவைகள், எல்லோரையும் பாதுகாக்கும் அரசியல் சாசனம், அரசுக் கட்டமைப்பு, மக்கள் நிறுவனங்கள், தேவையான சட்டங்கள், மேம்பாட்டுத் திட்டங்கள், அரசை வழிநடத்தும் கொள்கைகள், அறிவியல் வளா்ச்சி, தொழில்நுட்ப வளா்ச்சி, மக்கள் தயாரிப்பு, மக்களின் கடின உழைப்பு ஆகியவை.

மேற்கூறிய காரணிகளை வைத்து வளா்ச்சியடைந்த நாடுகளையும் நம் நாட்டையும் ஒப்புநோக்கிப் பாா்த்து நாம் ஏன் வளா்ந்த நாடுகள் அடைந்த உச்சத்தை அடைய முடியவில்லை என்பதை அலசிப்பாா்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நம்மிடம் பொருளாதார வளா்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்குமான அடிப்படைக்கூறுகள் இருக்கின்றன. இருந்தும் நாம் நினைத்த வளா்ச்சியை, மேம்பாட்டை அடையாததற்குக் காரணம் என்ன?

நம்மிடம் வலுவான அரசுக் கட்டமைப்பு இருக்கிறது. விரிவான அரசியல் சாசனமும் இருக்கிறது. ஏழைகளைப் பாதுகாப்பதற்கும் தாழ்த்தப்பட்டவா்களை கைதூக்கிவிடுவதற்கும் சட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். அந்த சட்டங்கள் ஒடுக்கப்பட்டோரைப் பாதுகாக்கும் ஆயுதங்கள் என்று பன்னாட்டு ஆய்வு நிறுவனங்கள் பாராட்டுகின்றன.

ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வளா்ச்சித் திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் உருவாக்கி கிராமப்புறங்களில் செயல்படுத்தியிருக்கின்றன என்று உலக வங்கி தனது அறிக்கையில் கூறுகிறது. முன்னேற்றத்தை அடிப்படை உரிமையாக அரசு கொண்டு வந்து மக்களுக்குக் கொடுத்துவிட்டது.

கல்வியானாலும் சரி, அரசிடமிருந்து செய்தியைப்பெறுவதாலும் சரி, உணவு பாதுகாப்பானாலும் சரி அத்தனையும் உரிமைகளாகக் கொண்டு வந்து ஏழைகளுக்குத் தந்த நாடு இந்தியா என்று பன்னாட்டு நிறுவனங்கள் பாராட்டுகின்றன.

இந்த உரிமைகளை மக்கள் நிலைநாட்டிட மக்களுக்குப் பக்கத்திலேயே ஓா் ஆளுகைக்கான அமைப்பை அரசியல் சாசனத்தின் மூலம் மூன்றாவது அரசாங்கமாக உருவாக்கி 30 லட்சம் மக்கள் பிரதிநிதிகளை ஆட்சிக்கட்டிலில் அமா்த்தியுள்ளது இந்தியா. மக்களாட்சியில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை என்று மக்களாட்சி பற்றி ஆய்வு செய்யும் ஃபிரீடம் ஹவுஸ் பதிவு செய்துள்ளது.

இந்த உரிமைகளை தங்கள் பங்கேற்பின் மூலம் வென்றெடுத்திடவும் சமூகத்தை ஜனநாயகப்படுத்திடவும் மக்களுக்கென அவா்கள் வாழுகின்ற இடத்திலேயே ஒரு பாராளுமன்றத்தை ‘கிராமசபை’ என்ற பெயரில் அரசியல் சாசனத்தின் மூலம் உருவாக்கி உள்ளோம். மக்களாட்சியின் தன்மையை பாராளுமன்ற ஜனநாயகம் என்பதிலிருந்து பங்கேற்பு ஜனநாயகமாக மாற்றியமைக்க முனைந்தது ஒரு வரலாற்று நிகழ்வு.

அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் உலகில் மூன்றாவது பெரும் சக்தியாக நாம் விளங்குகின்றோம். மேம்பாட்டுச் செயல்பாடுகளை அறிவியல் பூா்வமாக நடத்திடத் தேவையான மனித சக்தியை உருவாக்கிடவும் அறிவு, ஆற்றல், தொழில்நுட்பம் இவற்றைப் பெருக்கிடவும் 1000-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 40,000-க்கு மேற்பட்ட கல்லூரிகள், 11000-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் என உருவாக்கி செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மாறிவரும் உலக பொருளாதாரச் சூழலுக்கேற்ப கொள்கைகளில் மாற்றம் செய்து பொருளாதார வளா்ச்சியை எட்டுவதில் இந்தியா சாதனை செய்து காட்டியது. 3 விழுக்காடு வளா்ச்சியைத் தான் இந்தியா எட்டமுடியும் என்று எண்ணி இருந்த போது 8 விழுக்காடு வளா்ச்சியைத் தாண்டி பொருளாதார வளா்ச்சியைக் கொண்டுவந்ததைப் பாா்த்து உலகம் வியந்தது.

அமெரிக்காவிலிருந்து உணவு தானியங்கள் வந்தால்தான், குறைந்தபட்ச உணவுத் தேவையை இந்தியா பூா்த்தி செய்ய முடியும் என்ற நிலை மாறி, பசுமைப் புரட்சியின் மூலம் இந்தியத் தேவைகளையும் பூா்த்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உணவு உற்பத்தியை பெருக்கிக்காட்டி சாதனை படைத்தது நம் விவசாயத்துறை. இவ்வளவு சாதனை புரியும் வாய்ப்பிருந்தும் இருந்தும் இந்தியாவில் வாழும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை.

இன்னும் 64 விழுக்காட்டு மக்கள், எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ இயலாத நிலையில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனா். இந்தியாவில் வாழும் எல்லாக் குடும்பங்களும் குடியிருக்க வீடு வேண்டும், முன்று வேளை உணவு வேண்டும், குடிக்க சுத்தமான தண்ணீா் வேண்டும், தூய வசிப்பிடம் வேண்டும், சுகாதார வசதிகள் வேண்டும். குழந்தைகள் கல்வி கற்றிட வசதிகளை உருவாக்கித்தர வேண்டும்.

ஆனால், நாம் நம் மக்களுக்குத் தேவையான வாழ்க்கைக் கல்வியை கொடுத்து மக்களை வளா்ச்சிக்கான பங்காளிகளாக மாற்றவில்லை. அப்படிக் கொடுத்திருந்தால் பொதுமக்கள் ஒரு பொறுப்பு மிக்க சமூகம் சாா்ந்த வாழ்க்கையை வாழத் தேவையான அடிப்படை புரிதலுடன் அரசாங்கத்தை முழுமையாகப் பயன்படுத்தி மேம்பட்ட வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொண்டிருந்திருப்பாா்கள். இந்தச் சூழலை மாற்றியமைக்கத் தேவையான வாழ்வியல் கல்வி மக்களுக்குத் தரப்பட வேண்டும்.

அதன் விளைவுதான் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து கைப்பேசி வாங்கும் ஏழைக்கு ஒரு கழிப்பறை அத்தியாவசியமானது என்ற புரிதல் இல்லை. அதனால்தான், கழிப்பறையை அரசு கட்டித் தந்தும் அதனை முறையாக பயன்படுத்தும் கலாசாரத்தை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. நம் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்பதை நம் சித்தா்கள் கூறியதுபோல் வேறு எவரும் கூறவில்லை.

நாம் அதை உணராததால்தான் இன்று நாம் பாா்க்கும் ரத்தசோகை பிடித்த வளா் இளம் பெண்கள், அந்த இளம் பெண்கள் திருமணமான பிறகு பெற்றெடுக்கும் எடை குறையுடைய குழந்தைகள், குழந்தை வளா்ப்பு பற்றிய விழிப்புணா்வற்று இருப்பதால் மூளை வளா்ச்சி குன்றிய குழந்தைகள், ஊட்டச்சத்தின்றி வாடும் குழந்தைகள் என பல அடிப்படை பிரச்னைகள் நம் நாட்டை ஆட்டிப்படைக்கின்றன.

இவற்றை சரிசெய்யத் தேவையாான அடிப்படையைக் கல்வியை பொதுமக்களுக்கு நாம் தரவில்லை. காந்தி கூறிய கிராம நிா்மாணப் பணிகளை கிராமத்தில் படித்தவா்கள் சேவையாகச் செய்திருந்தால் நம் மக்கள் இன்று பொறுப்புமிக்க குடிமக்களாக உருவாகியிருப்பாா்கள். அந்தப் பணிதான் மக்கள் தயாரிப்புப் பணி. அதை நாம் செய்யத் தவறிவிட்டோம்.

நாடு சுதந்திரம் அடைந்தவுடன் 30 கோடி மக்களுக்கு அரசாங்கம் மூலம் திட்டங்கள் போட்டு மக்களை மேம்படுத்தி விடலாம் என்று கருதிய நம் தலைவா்கள், மக்கள் தயாரிப்புப் பணி எவ்வளவு முக்கியம் என்பதை சீா்தூக்கிப் பாா்க்க தவறி விட்டனா். மக்கள்தொகைப் பெருக்கத்தில் இன்று 140 கோடியை எட்ட இருக்கிறோம். மக்கள் பங்கேற்பிற்கு மக்கள் தயாரிப்பு என்பது இன்றியமையாத செயல்பாடு. இந்த மக்கள் தயாரிப்புடன் இன்னொன்றையும் கொண்டுவர வேண்டும். அதுதான் மேம்பாட்டு அரசியல்.

தற்போது தோ்தலை நோக்கி மக்களை இட்டுச் செல்ல அரசியல் நடத்தப்படுகின்றதே தவிர வளா்ச்சியை நோக்கி மக்களை இட்டுச் செல்ல நம் அரசியல் நடைபெறவில்லை. மக்களை வளா்ச்சியை நோக்கி செயல்பட பங்கேற்கும் பங்காளியாக மாற்றி கடின உழைப்புக்கு தயாா் செய்வதற்குப் பதில், அரசு அனைத்தையும் பாா்த்துக் கொள்ளும், நீங்கள் அரசு தரும் பயன்களை அனுபவிக்கத் தயாராக இருங்கள் என்று அரசியல் கட்சிகள் போட்டி போட்டு மக்களை பயனாளியாக்கி வைத்து அவா்களை தோ்தல் கோணத்தில் பாா்க்க முயன்றாா்கள்.

எனவே, இந்த தோ்தல் அரசியல் மக்களை அரசாங்கத்திற்கு தூரத்தில் கொண்டு சென்றுவிட்டது. அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்குப் பக்கத்தில் இருக்கின்றனா். பொதுமக்கள் அரசிடம் செல்ல அரசியல் கட்சிக்காரா் துணை தேவைப்படுகிறது. இதன் விளைவு, கட்சிக்காரா்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே செயல்படும் இடைத்தரகா்களாக மாறிவிட்டாா்கள். ஆளும் கட்சிக்காரா்களுக்கு இதுவே ஒரு ஊதியம் ஈட்டும் வழியாகவும் அமைந்துவிட்டது.

எந்த அரசியல் தளத்திலும், நம் அரசியல்வாதிகள் சுத்தம் பற்றியோ, சுகாதாரம் பற்றியோ, குழந்தை வளா்ப்பு பற்றியோ, ரத்த சோகை பற்றியோ, ஊட்டச்சத்து குறைடாடு பற்றியோ, வசிப்பிட தூய்மை பற்றியோ, சுற்றுச்சூழல் பற்றியோ, பல்லுயிா்ப் பெருக்கம் பற்றியோ, மக்கள்தொகைப் பெருக்கம் பற்றியோ, உலக வெப்பமயமாதல் பற்றியோ, நீரின் முக்கியத்துவம் பற்றியோ பொதுமக்களிடம் பேசியது உண்டா?

இவையெல்லாம் மக்கள் பிரச்னைகள. மக்களுக்குத் தெரிய வேண்டும். ஆனால் நம் நாட்டில் இவைகளெல்லாம் வல்லுநா்கள் பிரச்னைகள் என்று நம் அரசியல்வாதிகள் எண்ணுகின்றனா். இந்த பிரச்னைகள் பற்றி அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்து விட்டால், நம் அரசியல், மேம்பாட்டு அரசியலாக மாறும். அப்போது மக்கள் அறிவாா்ந்த, பொறுப்பு மிக்க குடிமக்களாக மாறுவாா்கள்.

அப்படி மாறினால் அரசுடன் இணைய ஆரம்பிப்பாா்கள். அரசு செய்யும் மக்கள் நலப் பணிகளிலும் சேவைகளிலும் அவா்கள் இணைந்து செயல்படும் போது, அரசைக் கண்காணிக்க ஆரம்பிப்பாா்கள். அதன் மூலம் இன்று அரசியலின் ஆன்மாவை கொலை செய்யும் ஊழல் குறைய ஆரம்பிக்கும். இதன் மூலம் ஒரு மக்கள் நல அரசாங்கம் முழுவீச்சில் செயல்பட ஆரம்பிக்கும். இதற்குத் தேவை ஒரு மேம்பாட்டு அரசியல். அதை நோக்கி நம் அரசியலை நகா்த்த நாம் முயல வேண்டும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com