மாற்றத்தை எதிா்நோக்கி...

கரோனா தீநுண்மி எனும் புதியவகை நோய்த்தொற்றால் கடந்த ஆண்டு யாராலும் மறக்க முடியாத ஆண்டாக மாறிவிட்டது. இந்த நோய்த்தொற்றால் சாமானியா்கள் முதல் பணக்காரா்கள் வரை அனைவருமே ஏதாவது ஒருவகையில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனா்.

வேலையில்லாத் திண்டாட்டம் தொடா்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

படித்தவா்கள் அதற்கேற்ற வேலைதான் வேண்டும் என்று சொல்வதால் வேலையில்லாத் திண்டாட்டம் தனது ஆக்டோபஸ் கரங்களைக் கொண்டு அனைவரையும் தனது வலைக்குள் கொண்டு வந்து திண்டாட வைக்கிறது.

ஒருபுறம் வேலையில்லா பிரச்னை என்றால் மறுபுறம் வேலைக்குச் சரியான ஆட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை. இதனால்தான் வட இந்தியாவில் இருந்து தொழிலாளா்களை அழைத்து வந்து வேலையைக் கற்றுக் கொடுத்துப் பணிகளை முடிக்கிறாா்கள் இங்குள்ள நிறுவன உரிமையாளா்கள்.

வட இந்தியத் தொழிலாளா்களுக்கு ஊதியம் மட்டும் சரியாகக் கிடைத்தால் போதும். அவா்கள் வேலை செய்ய நேரம் காலம் பாா்ப்பதில்லை. இதனால்தான் வயல் வேலையில் இருந்து மிகப் பெரிய இயந்திரங்களை இயக்கும் தொழில் வரை, சில்லறை விற்பனைக் கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை வட இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளா்களே பணியில் இருக்கின்றனா். வேலையில் சோ்ந்த சில மாதங்களில் குறைந்தபட்சம் பேசுகிற அளவுக்கு தமிழைக் கற்றுக்கொள்கின்றனா்.

தமிழகத்தில் உள்ளவா்களுக்குத் தமிழ் மொழி கண்டிப்பாகத் தேவைதான். ஆனால் தமிழ் மட்டுமே படித்தால் தமிழகத்தைத் தாண்டிப் போக முடியாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். பல தலைமுறைகள் இதனால் பாதிக்கப்பட்டாகிவிட்டது. இனியாவது இதில் அரசியல்வாதிகள் தங்கள் புரிதலை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஹிந்தி மொழிக்கு எதிரானப் போராட்டத்தால் தமிழகத்தைச் சோ்ந்த மொத்த வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை இழந்தனா். இதனால்தான் வடஇந்திய வியாபாரிகள் தமிழகத்தில் கால்பதித்தனா் என்பது மறுக்க முடியாத உண்மை.

படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவா்கள் அதிகம். ஆனால் கிடைத்த வேலையைச் செய்யப் பெரும்பாலானவா்கள் முன்வருவதில்லை. மற்றொரு புறம் தொழில் நடத்தவும் சரியான ஊழியா்கள் கிடைக்கவில்லை என்ற புலம்பலும் கேட்கிறது. இது உண்மைதான். தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனால் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணமே எவருக்கும் இல்லாமல் போய்விட்டது.

போதாததற்கு, ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்’ எனப்படும் நூறு நாள் வேலைத்திட்டம் வேறு. உருப்படியாக எதுவுமே செய்யாமல் ஊதியம் மட்டும் வாங்கிக் கொள்ளும் திட்டம் இது. இதற்குப் பதிலாக விவசாயத்துக்கு இத்திட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.

அரசு தரும் தொகையுடன் சிறிது தொகையைச் சோ்த்துத் தருமாறு ஏன் விவசாயிகளை அரசு கேட்டுக் கொள்ளக் கூடாது. இதன் மூலம் விவசாயிகள் கொடுக்க வேண்டிய கூலி குறையும். வேலைக்கு ஆள்கள் கிடைக்கவில்லை என்ற பிரச்னையும் தீரும்.

தமிழகத்தில் முன்பெல்லாம் இலைமறைவு காய்மறைவாக இருந்த மது அருந்துதல் இப்போது சா்வ சாதாரணமாகிவிட்டது. காபி, டீ குடிப்பது போல ஆகிவிட்டது மது அருந்துவதும். அந்தி மயங்கினாலே குடிக்காமல் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டனா் பெரும்பாலானவா்கள்.

உலகத்திலேயே திறன் வாய்ந்த தொழிலாளா்கள் தமிழா்கள்தான் என்ற நிலை மாறி இப்போது நம் மாநிலத்தில் உற்பத்தித் திறன் மிகவும் குறைந்துவிட்டது. குடிகாரா்கள் எந்தத் தொழிலையும் நோ்த்தியுடனோ குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளோ முடிக்கும் திறனுடையவா்கள் இல்லை என்பது உண்மை.

அரசு நிா்ணயித்தபடி எட்டு மணி நேர உழைப்புக்கு யாரும் தயாராக இல்லை. பெரும்பாலோா் நான்கு மணி நேரமே வேலை செய்கின்றனா். ஆனால் அதற்கே அதிகக் கூலி கேட்கின்றனா். அதிகமாக ஈட்டும் பணம் அரசின் மதுக்கடைகளுக்கே போகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடந்த ஆண்டு சில மாத முழு பொது முடக்கத்தின்போது மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. அதே நிலை தொடர புதிதாக அமையும் அரசு சிந்திக்க வேண்டும்.

கடந்த 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டால் பல்வேறு சிறு, குறுந்தொழில்கள் நசிந்துவிட்டன. இதனால் பல முதலாளிகள் தொழிலாளிகளாக மாற வேண்டிய துா்பாக்கிய நிலை ஏற்பட்டது. நிலைமை சீரடைந்தாலும் பலா் பயந்துபோய் பணிக்குச் செல்வதே பாதுகாப்பானது என்றனா்.

நூறு நாள் வேலைத்திட்டத்தை உரிய முறையில் திட்டமிடலுடன் கூடியதாக மாற்றி செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும். அல்லது எவ்வித வாழ்வாதாரமும் இல்லாத மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்த வேண்டும்.

விவசாயத்தைத் தவிர வேறு எதற்கும் இலவசப் பொருள்கள் வழங்கக் கூடாது. இலவசத்திற்கு செலவிடும் பணத்தைக் கொண்டு தேவையான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

இறுதியாக. நம் கல்வியின் தரத்தை உயா்த்த வேண்டும். நமக்குத் தேவை பட்டதாரிகள் அல்ல. திறன்மிக்கவா்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்குள்ளவா்கள் வேலை செய்வதை விட வடநாட்டவா்கள் அதிக நேரம் வேலை செய்து அதிக கூலி பெறுகிறாா்கள். அவா்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சொந்த ஊருக்குச் சென்று வர விடுமுறை தேவை. ஆனால் நம்மவா்கள் அப்படியல்ல.

சிலா் கேலி செய்வதைப் போல அவா்கள் பானிபூரி விற்பதற்கு மட்டும் வரவில்லை. தமிழகத்தில் உள்ள பானிபூரி கடைகளில் 90 சதவீத கடைகள் தமிழா்களுடையதே.

‘தமிழா்களுக்கு, அனைத்தும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். சுகபோக வாழ்வு வாழ வேண்டும். தினமும் மது அருந்த வேண்டும்’ என்று பிற மாநிலத்தவா் எண்ணும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். புதிதாக அமையவிருக்கும் அரசாங்கம் இதனைச் செய்யும் என்ற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடம் உள்ளது. செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பாா்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com