மதுவிலக்கும் சிக்கல்களும்!

 மதுவிலக்கும் சிக்கல்களும்!

 தமிழக அரசு இவ்வாண்டு 500 மதுக்கடைகளை மூடப்போவதாக அண்மையில் அறிவித்திருக்கிறது. ஆண்டுக்கு 500 கடைகள் மூடப்படும் என்றும், அது முழு மதுவிலக்கை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் அரசு கூறுவது நடைமுறை சாத்தியமா? மதுவிலக்கே இல்லாத மாநிலமாக நம் மாநிலத்தை மாற்றிக் காட்ட இயலுமா?
 காந்தி பிறந்த குஜராத் மாநிலம் தவிர்த்து, சுதந்திர இந்தியாவில் அன்று மதுவிலக்கு நடைமுறையில் இருந்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றால் நம்ப முடிகிறதா?
 இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஏறத்தாழ 24 ஆண்டுகள் வரை அதாவது 1971-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது.
 ஆனால், அதன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதோடு மாத்திரமல்லாமல், மது விற்பனைக்கென்றே ஒரு நிறுவனத்தை அரசு நிறுவி செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்ல, மதுவிற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்படும் ஒரே மாநிலமாக தற்போது தமிழ்நாடு இருப்பது வேதனையிலும் வேதனை.
 இந்தச் சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. பல்வேறு கட்சிகள், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடத்துவது, நடைப்பயணம் மேற்கொள்வது, மாரத்தான் ஓட்டம் ஓடுவது என்று பல்வேறு வழிகளில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. மதுலக்குதான் எங்கள் இலக்கு என்று சில கட்சிகள் போராட்டம் நடத்துவதும், மதுவிலக்குதான் எங்கள் லட்சியம் என்று சில கட்சிகள் முழங்குவதும் தொடர்கின்றன.
 இந்த நிலையில், கால ஓட்டத்தைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. 24ஆண்டு காலம் மதுவிலக்கு அமலில் இருந்த தமிழ்நாட்டில், மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது ஏன்? இன்று இந்திய அளவில் மது விற்பனையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் தமிழகத்தில் இனி மதுவிலக்கு சாத்தியம்தானா என்கிற கேள்வி எழுகிறது.
 இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, அதாவது 1937-ஆம் ஆண்டு முதல் முதலில் மதுவிலக்கு அமலானது. 1944-ஆம் ஆண்டு மதுவிலக்கை ரத்து செய்து விட்டு, கள்ளுக்கடைகளைத் திறக்கத் திட்டமிட்டது அன்றைய ஆங்கிலேய அரசு. அதை ராஜாஜி கடுமையாக எதிர்த்தார். ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி 1944-ஆம் ஆண்டு மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன.
 இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, மீண்டும் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தது.
 சுதந்திர இந்தியாவில் 1971-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியில் தொடங்கி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா வரை எந்த முதலமைச்சரும் மதுவிலக்கை ரத்து செய்ய முன்வரவில்லை.
 திமுக 1967- ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய போது, மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரைத்தனர். மதுவிலக்கை ரத்து செய்தால், 600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் அன்று கூறிய யோசனையை நிராகரித்தார் அண்ணா. "மதுவிற்பனை மூலம் வரும் வருவாய் தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெய்யை வாங்குவதற்கு சமம்' என்றார்.
 ஆனால், அண்ணாவுக்குப் பின்னர், தமிழக முதல்வரான கருணாநிதி மதுவிலக்கை நீக்கினார். 1971-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய திமுக அரசு மதுவிலக்கை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்ததன் பின்னணியை ஆராய்ந்தால் அது வியப்பான ஒன்றாக இருக்கும்.
 அப்போது இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறையில் இல்லாததால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்தது மத்திய அரசு. தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. எனவே, எங்களுக்கும் மானியம் தரவேண்டும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி கேட்ட போது அதற்கு மறுத்து விட்டது மத்திய அரசு.
 "ஏற்கெனவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியுள்ள மாநிலங்களுக்கு மானியம் கிடையாது' என்று மத்திய அரசு கூறியது. "மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதற்கு இப்படியொரு தண்டனையா' என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, 1971-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்து அதற்கான அவசர சட்டம் ஒன்றையும் பிறப்பித்தார்.
 தமிழ்நாட்டில் பல ஆண்டு காலம் நடைமுறையில் இருந்த மதுவிலக்கு திடீரென ரத்து செய்யப்பட்டது மக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதையும் கருணாநிதி சமாளித்தார். "அக்கினி வளையத்துக்குள் இருக்கும் கற்பூரமாக தமிழ்நாடு இருக்கிறது. நான் என்ன செய்வது? மற்ற மாநிலங்களில் மதுவிற்பனை நடக்கும் போது நான் மட்டும் என்ன செய்ய முடியும்' என சாமர்த்தியமாக பதிலளித்தார் அவர். கருணாநிதியின் இந்த விளக்கம் அவரது முடிவை நியாயப்படுத்தியது.
 அதன் பின்னர் 1974-ஆம் ஆண்டு மதுவிலக்கு மீண்டும் நடைமுறைக்கு வந்தது. 1983-ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சரானபோது மீண்டும் மதுவிலக்கு ரத்தானது. 1987-இல் மீண்டும் மதுவிலக்கு அமலானது. 1990 முதல் 1991 வரை மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. 1991-ல் முதல் முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா முதலமைச்சராக முதல் கையொப்பமிட்டு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார்.
 தொடர்ந்து 2001-வரை தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. அதன் பின்னர், மதுவிலக்கால் கள்ளச்சாராயம் பெருகியதால், வேறு வழி இல்லாமல் அரசு மதுவிலக்கை தளர்த்த வேண்டிய சூழ்நிலை உருவானது. தனியார் வசம் இருந்த மதுக்கடைகள், அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இன்று தேசிய அளவில் அதிக வருவாயை ஈட்டித் தரும் பொதுத்துறை நிறுவனம் டாஸ்மாக்தான்.
 தமிழகத்தில் குடிப்பழக்கம் இன்று பரவலாகி விட்டது. மொத்த மக்கள்தொகையில் பெண்கள், குழந்தைகள் தவிர்த்தால் கிட்டத்தட்ட 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மதுப்பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். பதின்பருவத்தினரிடம் மதுப்பழக்கம் பரவலாகி விட்டது என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
 மது விற்பனையும், மது அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் அதே நேரத்தில் மதுவிலக்கு குறித்த கோரிக்கைகளும் தமிழகத்தில் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அண்மைகாலங்களில் மதுவிலக்கை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டங்கள் அதிகரித்து வருவது இதைத்தான் காட்டுகிறது. சமுதாயத்தின் சகல நிலையிலும் மது விற்பனை, மதுவின் பாதிப்பு குறித்த கவலைகள் பரவலாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
 அதிகரிக்கும் குற்றங்கள், சாலை விபத்துகள், குடும்ப உறவுகளில் சிதைவு, இளவயது மரணங்கள், அதிகரிக்கும் நோய் பாதிப்பு என பல பிரச்னைகளுக்கும் மது காரணமாக அமைந்திருக்கிறது என்று சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. ஆகவேதான், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. டாஸ்மாக்கை மூட வேண்டும் என்கிற போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மதுவிலக்கு என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியுமென்றால் அதை அமல்படுத்த திமுக தயங்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒருமுறை சொல்லியிருந்தார்.
 ஆகவே, மதுவிலக்கு சாத்தியமா என்பதை ஆராய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சமுதாய, பொருளாதார, தனிமனித ஆரோக்கியம் இவற்றை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்னையாக மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. இதைத் தடுக்க மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தாக உள்ளது.
 மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகி விடும் என்று கூறுவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலர் கூறுகின்றனர். காரணம், கள்ளச் சாராயம் விற்கப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மதுவிலக்கு அமல்படுத்ப்பட்டால், இப்போது மது குடிப்பவர்களில் 10 சதவீதம் பேர் வேண்டுமானால் சாராயம் அருந்தலாம். ஆனால், மது குடிப்போரின் எண்ணிக்கை இதனால் கணிசமாக குறைந்து விடும் என்பதை மறுப்பதற்கில்லை.
 இதன் மூலம் குற்றங்கள், விபத்துகள் எல்லாம் குறையும். அரசே மது விற்கும்போது அதைக் குடிப்பது எப்படி தவறாகும் என்பது மது குடிப்போரின் வாதமாக உள்ளது. எனவே, அரசு மது விற்பனையை கைவிடும் நிலையில் மது குடிப்போரின் எண்ணிக்கைக் கணிசமாக குறையும் என்பதில் ஐயமில்லை. மதுவிலக்கு அமலானாலும் சிலர் குடிப்பதைத் தடுக்க முடியாது. முழுமையான மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தியமில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனாலும், அதனை முயன்று பார்க்க வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும்.
 அண்டை மாநிலங்களில் சர்வ சாதாரணமாக மது பானங்கள் கிடைக்கும் நிலையில், அங்கெல்லாம் சென்று மது அருந்துவதோ, அங்கிருந்து ரகசியமாக வாங்கி வந்து விற்பதோ மிக எளிதாகி விடும். விலை குறைவு என்ற ஒரே காரணத்திற்காக புதுவையில் இருந்து ஏராளமான மது பானங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியிருக்க முழுமையாக மதுவிலக்கு அமலானால் வெளியில் இருந்து மதுவை கொண்டு வருவதையும், அங்கு சென்று குடிப்பதையும் தடுக்க முடியாது என்று ஒருசாரார் கருதுகிறார்கள்.
 குடிக்கின்ற ஒவ்வொருவரும் மனம் மாறினால்தான் குடிப்பழக்கத்தை முழுமையாக ஒழிக்க முடியும். மிகப்பெரிய மக்கள் எழுச்சி வந்தால்தான், அரசும் சேர்ந்து மதுக்கடைகளை மூடுவதற்கு வாய்ப்பு உருவாகும். சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும் கூட, மதுவிலக்கு நடைமுறைப்படுத்துகிறபோது மிகப்பெரிய மாற்றத்திற்கான புதிய பாதை ஒன்று நிச்சயம்
 அமையும்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com