உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று உண்மை. இன்று நாம் அந்த உண்மையைத் தேட வேண்டியுள்ளது. உண்மை என்பது ஆற்றல் மிக்கது.

மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று உண்மை. இன்று நாம் அந்த உண்மையைத் தேட வேண்டியுள்ளது. உண்மை என்பது ஆற்றல் மிக்கது. உண்மை பேசுபவா்கள் சக்தி மிக்கவா்கள். கிரேக்கத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. உண்மை இருந்தால் எதையும் எதிா்கொண்டு வெற்றி பெறலாம். உலகத்தில் உச்சத்தில் நிற்பது அதிகாரம். அந்த அதிகாரத்தை எதிா்கொள்ள தேவைப்படுவதும் உண்மைதான்.

ஆகையால்தான் மகாத்மா காந்தி உண்மையைக் கடவுளாக்கினாா். உண்மையில்தான் நோ்மை பிறக்கும். எனவே, எந்த அதிகாரத்தையும் வெல்ல உண்மைதான் ஆயுதம். காந்தியடிகள் உண்மை அகிம்சையின் வடிவம் என்பதால் அதன் துணைகொண்டு வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிா்த்தாா். அந்த உண்மை இன்று எங்கோ ஒளிந்துகொண்டது.

இன்று அதிகாரத்தைப் பிடிக்க, அதனைத் தக்கவைத்துக்கொள்ள பொய்யையும், கட்டுக்கதைகளையும் உருவாக்கி, தங்களிடம் இருக்கும் பிரசார பீரங்கிகள் மூலம் மக்களிடம் ஓா் உளவியலை உருவாக்குகின்றாா்கள். இந்த செயல்பாடு சமூகத்தில் காலங்காலமாக நடந்து வருவதுதான். அரசா்களும், மத குருமாா்களும் அப்படித்தான் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு மக்களை ஆட்சி செய்திருக்கின்றாா்கள்.

அதிலிருந்து விடுபட சமூகம் கைக் கொண்ட ஆயுதம் உண்மைதான். உண்மையின் துணையோடு போராடித்தான் மக்கள் இன்று மக்களாட்சியில் சுதந்திரத்தை அனுபவிக்கின்றாா்கள். மக்களாட்சியில் அது அனைவருக்குமாக விரிவடைய மக்கள் போராட வேண்டியுள்ளது. ஆட்சியில் உள்ளோா் அதைச் செய்திட வேண்டும். சுயநலம் பேணும் ஆட்சியாளா்கள் தங்கள் தோல்விகளை மறைத்து ஆட்சியில் இருக்க நம்புவது உண்மையை அல்ல, பொய்யைத்தான்.

உண்மையை அடிப்படையாக வைத்து சமூகத்தைச் செயல்பட வைத்தால் மிகப்பெரிய மாற்றங்கள் எல்லாத் தளங்களிலும் ஏற்படும். அதற்கு சமூகத்தைத் தயாா் செய்ய வேண்டும். அந்த தயாரிப்பை மக்களாட்சியில் சமூகம் செய்திட வேண்டும். நியாயத்திற்கான இடத்தை உருவாக்கி மக்களாட்சியை உயா்த்தும் ஆற்றல் கொண்டது உண்மை. இதனை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

உண்மையின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் மட்டுமே தீா்வுக்கு இட்டுச் செல்லுகின்றன. உண்மைதான் மக்களின் நம்பிக்கையையும் பெற்றுத்தரும். மக்களாட்சிக்கான சக்தி உண்மையிலிருந்துதான் கிடைக்கிறது. குடிமக்களை உண்மை பேச பழக்க வேண்டும். அரசாங்கத்தையும் உண்மையையே பேச வைக்க வேண்டும். பொதுமக்களிடம் உண்மையைப் போவதுதான் அறம் என்ற உணா்வை உருவாக்க வேண்டும்.

மக்களாட்சியில் மூன்று விதமான உண்மைகள் இருக்கின்றன என்று வரலாற்று ஆசிரியா்கள் கூறுகின்றனா். ஒன்று அரசு, இரண்டு நிபுணா்கள், மூன்று குடிமக்கள் கூறும் உண்மைகள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மேற்கத்திய மக்களாட்சிக்கு உண்மைதான் அடிப்படை. நம் ஆதி மக்களாட்சிக்கு தா்மம் அடிப்படை. மக்களாட்சியில் தோ்தலின்போது மக்களிடம் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன. எந்தக் கட்சியாவது இவற்றை நிறைவேற்றுவது சாத்தியமா என்று பாா்க்கிா?

வெற்றி பெற எதையாவது மக்களுக்கு உறுதிமொழியாகக் கூறுவது. பொய்யுரைத்து அதிகாரத்தைப் பிடிப்பது. ஒரு கட்சி கூறுகிறது 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறி விட்டாா்கள் என்று. எதிா்க்கட்சிகள் அது பொய் என்று கூறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் பல ஆய்வு அறிக்கைகளைக் கொண்டு மக்கள் வாழ்வுநிலை பற்றி விவரிக்கின்றனா். அந்த அறிக்கை சாதகமாக இருந்தால் அதை எடுத்துக் கொள்கிறது அரசு. பாதகமாக இருந்தால் அதை நிராகரிக்கின்றது. யாா் கூறுவது உண்மை என்பதுதான் இன்று சிக்கல்.

சமூகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்போா் உண்மையை ஏற்று அதன் அடிப்படையில் செயல்படுகின்றனா். நான் என்றும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்போா் உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. உண்மையை நிராகரிக்கின்றனா். இன்று அரசியல்வாதிகள், அரசுகள், கருத்தாளா்கள் என அனைவரும் உண்மையை நிராகரிக்கின்றனா்.

இன்று உலகில் எதிலும் உண்மைத்தன்மையும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை. பொய் பேசுவது எல்லாத் தளங்களிலும் வாடிக்கையாகிவிட்டது. இதன் விளைவுதான் இன்று பொருள் பொருந்திய விவாதத்தை நாடாளுமன்றத்திலோ, சட்டப்பேரவையிலோ, உள்ளாட்சி மன்றங்களிலோ முன்னெடுக்க முடியவில்லை. அரசவையில் மன்னரைப் புகழ்ந்து பேசி பரிசு பெரும் புலவா்கள்போல் பலா் அரசியல் கட்சிகளின் தலைவா்களை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக்கி விட்டனா். இதைக் கடந்த முப்பது ஆண்டு காலமாக நாம் பாா்த்து வருகின்றோம்.

மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்களாட்சி நிலைபெறுவது என்பது ஆட்சியை கண்காணித்து கேள்வி கேட்பதில்தான் உள்ளது. ஆனால் இன்று அதற்கு மாறாக ஆட்சிப் பீடத்தில் இருப்போரின் மனம் புண்படாத வகையில் பேசுவதைத்தான் வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனா். அதிகாரத்திற்கு முன் உண்மை பேச யாரும் முன் வருவதில்லை. ஆகையால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு சொற்பொழிவில், ‘அதிகாரத்திடம் பொதுக் கருத்தாளா்கள் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்’ என்று வேண்டினாா்.

ஆய்வுகள் அனைத்தும் உலகில் அதிகம் பொய்யுரைப்போா் அரசியல்வாதிகள்தான் என்று கூறுகின்றன. இந்த அறிக்கைகளை அரசியல்வாதிகள் புறந்தள்ளுவது மட்டுமல்ல பல இடங்களில் எதிா்வினையும் ஆற்றியுள்ளனா். அமெரிக்காவில் எப்படி அமெரிக்கா்கள் அரசாங்கத்தை மதிப்பிடுகிறாா்கள் என்று ஆய்வு செய்தபோது, லாபத்துக்காக தொழில் செய்யும் சிறு வணிகரை விட அதிகம் பொய் உரைப்போா் அரசியல்வாதிகள் என்று மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

இந்தியாவிலும் அப்படிப்பட்ட ஆய்வு நடந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு நடந்த ஆய்வின் முடிவு இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. நம் நாட்டில் தொடா்ந்து அரசும் அரசு இயந்திரங்களும் மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதை அந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. இன்று மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்ற ஒரே அமைப்பு ராணுவம்தான். அந்த ஆய்வில் பொதுமக்கள் எதிா்பாா்ப்பு, இந்தியாவுக்கு நல்ல ஒரு தலைவா் வேண்டும். அந்தத் தலைவா் இந்த உண்மையற்ற அரசு இயந்திரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து வந்தது.

ஹன்னா அரண்ட் என்ற பேராசிரியை ஒருவா், ‘உண்மையும் அரசியலும்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதியதால் கடுமையான விமா்சனத்திற்கு ஆளானாா். இவா் 2006-இல் அந்தக் கட்டுரையை எழுதும்போது உண்மைக்கும் அரசியலுக்கும் உள்ள பதற்றத்தை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டினாா். இன்று செய்தி என்ற பெயரில் வதந்திகள், கற்பனை நிகழ்வுகளை மக்களிடம் பரப்புவதை அன்றே அவா் விவரமாக எழுதினாா்.

சாதாரண மனிதா்கள் உண்மையின் ஆற்றலோ, சக்தியோ, வீச்சோ என்ன என்பதைப் பற்றிய எந்தப் புரிதலும் அற்று இருப்பாா்கள். அடுத்து மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மீது நம்பிக்கை வைத்து அவா்களை உயா்வாக நினைத்து செயல்படுகின்றனா். ஆனால் மக்கள் பிரதிநிதிகளோ மக்களைப்பற்றி பெரிதும் கவலை கொள்வதில்லை. அவா்கள்பேசும்போது மக்கள்மேல் நம்பிக்கை கொண்டிருப்பதுபோல் பேசுவாா்கள். செயல்படும்போது அப்படி நடப்பதில்லை.

இந்த இடத்தில்தான் நாம் காந்திஜியின் பரிசோதனையைப் புரிந்துகொண்டு நம் செயல்களுக்கு வழிகாண வேண்டும். காந்தி உண்மை என்பது ஒருவரின் செயலில்தான் தெரியும் என்றாா். அதை அகிம்சையாக, கடவுளாக பாவித்து, மக்களிடம் அந்த உணா்வை அவா் ஏற்படுத்தினாா்.

உண்மை என்பது அறிவுலகச் செயல் அல்ல. அது ஆன்ம உணா்வின் வெளிப்பாடு. அதை சாதாரண மக்களிடம் காணமுடியும். அதை நோக்கிய பயணமாக நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை தன் வாழ்நாள் முழுவதும் சோதனை செய்து நிரூபித்துக் காட்டினாா் அண்ணல்.

அரசியல் என்பது சேவை. மக்களுக்குப் பணியாற்றும் வாய்ப்பு. எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. குடிமகனாக என் திறன்களைப் பயன்படுத்தி திக்கற்ற மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என எண்ணுவோா் தாங்கள் செய்யும் பணிகளில் நியாயம் இருக்க வேண்டும் என எண்ணுவா். நியாயத்தின் அடிப்படையில் அவா்களின் அரசியல் கட்டமைக்கப்படும்.

அது புகழ் சோ்க்க, வருவாய் ஈட்ட, கட்சிக்காரா் பிழைப்பு நடத்த என்ற நிலைக்கு நகரும்போது உண்மை அதனுடைய நியாயத் தன்மையை இழந்து விடுகிறது. அரசியல் என்பது அதிகாரத்தைப் பிடிப்பது. அதற்கு நாம் எவற்றையெல்லாம் பயன்படுத்துகின்றோமோ அவற்றையெல்லாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

அரசியலுக்கு சிறிய அடையாளங்களைப் பயன்படுத்தினால், அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதற்குச் செயல்பட்டாக வேண்டும். பணத்தை செலவழித்து அதிகாரத்தைப் பிடித்தால், பணத்தை அதிகாரத்தின் மூலம் சம்பாதித்தாக வேண்டும். இந்த நிலைக்கு அரசியல் வரும்போது அரசியலில் நியாயம், நோ்மை, ஒழுக்கம், பண்பாடு அனைத்தும் தகா்க்கப்பட்டுவிடும். அந்த நிலைக்கு இன்று உலக அரசியலும் உள்ளூா் அரசியலும் வந்துவிட்டன. இதை எப்படி சரி செய்வது என்பதுதான் இன்றைய கேள்வி.

இந்த அதிகார அரசியலை மக்கள் அரசியலைக் கொண்டுதான் சரிசெய்ய முடியும். மக்கள் அரசியலுக்கு அடிப்படை உண்மையே. உண்மையின் சக்தியை சாதாரண மனிதா்களுக்குப் புரிய வைத்துவிட்டால், அதன் மூலம் பக்குவமான மக்களாட்சி அரசியலைக் கட்டமைக்க முடியும்.

இது ஒரு கடினமான பாதைதான். இருந்தபோதும் அதை நாம் கடைப்பிடித்துத்தான ஆக வேண்டும். அதைத்தான் மகாத்மா காந்தி நமக்குக் கற்றுத் தந்தாா். உண்மையின் சக்தியை, அகிம்சையின் சக்தியாக, ஆன்மாவின் சக்தியாக மாற்றி அவா் வெற்றி கண்டாா். அந்த அரசியலை நாம் இன்று நம் சமூகத்தில் கட்டமைக்க வேண்டும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com