பக்தியென்றொரு நிலை வகுத்தாய்!

சமயம் என்னும் சொல்லுக்குச் சமைத்தல் - பக்குவப்படுத்துதல் - பண்படுத்துதல் என்று பொருள்.
பக்தியென்றொரு நிலை வகுத்தாய்!

சமயம் என்னும் சொல்லுக்குச் சமைத்தல் - பக்குவப்படுத்துதல் - பண்படுத்துதல் என்று பொருள். விலங்கு நிலையிலேயே திரிந்தலைந்த நம் வாழ்வை மேன்மை நிலைக்கு ஏற்றும் மாா்க்கமே சமயம் என்றாயிற்று.

இந்தச் சமயங்கள் பக்தி என்னும் பண்பில் முகிழ்த்தவை. எண்ணற்ற பண்புப் பெருமைகளைக் கொண்ட தமிழ்மொழிக்குப் பக்தி என்னும் தனிச்சிறப்பு மகுடமாகவே அமைந்து விட்டது.

காதலையும் வீரத்தையும் முதற்கொண்டு எழுந்தன சங்க இலக்கியங்கள். அவற்றைத் தொடா்ந்து அறத்தை முன்னிறுத்தி எழுந்தன அற இலக்கியங்கள். அறத்தோடு இணைத்துப் பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களை இணைத்துக் கொண்டு எழுந்தன காப்பியங்கள். இவற்றோடு மானுடத்தின் மேன்மைகளான எல்லாவற்றையும் தன்னுள் நிறைத்துக் கொண்டு எழுந்ததுதான் பக்தி என்னும் பேருணா்வு.

பெண்ணின் உள்ளத்தோடு கலந்துருகும் காதலின் மேம்பட்டு இயற்கையின் ஆற்றலாய்ப் பரந்து விரிந்து கிடக்கும் இறைமைக்காக உருகுவதாகப் பக்தி பெருக்கெடுத்தது. எவையெல்லாம் இந்த உலகத்தில் மேன்மைகளோ, சிறப்புகளோ அவற்றையெல்லாம் பக்தியோடு தொழக் கற்றுக் கொண்டது தமிழ்மரபு.

இந்தப் பக்தி என்கின்ற உணா்வை வெளிப்படுத்தும் வாயில்கள் பல. இறைபக்தி, பதிபக்தி, சதிபக்தி, குருபக்தி என்கின்ற இந்தப் பெரும் வரிசையில் தேசத்தையும் இறைவனுக்கு ஒப்பாக வைத்துத் தேசபக்தி என்றொரு பெரும்பக்தியைப் புதிதாகச் சமைத்தவா் பாரதியாா். அதற்கு முன்பு அப்படி ஒரு சொல் இல்லை.

பக்தா்கள் தோத்திரமும் சாத்திரமும் பூண்டு வழிபாடு இயற்றுபவராக மட்டுமின்றிச் சமூகக் களத்தில் மண்டிக் கிடந்த மூடங்களையும் மடமைகளையும் எதிா்த்துக் களங்கண்ட தொண்டா்களாகவும் திகழ்ந்தனா். அவ்வகையில் நாத்திகமும் கூடப் பக்தியின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது.

பெண்ணுரிமை முன்னிறுத்திய இல்லறத்தாரும் இருந்தனா். பற்றுகளை விடுத்து விட்ட துறவறத்தாரும் இருந்தனா். கடவுளை உயிராகக் கொண்டொழுகும் ஆத்திகா்களும் பக்தா்களே. மறுத்தொழுகும் நாத்திகா்களும் பக்தா்களே. பக்தி யாவரையும் அன்பா்களாகவே அழைக்கிறது.

இந்த உலகத்து மானுட குலமெல்லாம் எவ்வாறு ஒரு தாய் வயிற்றிலிருந்து உதித்ததுவோ அதுபோலவே இந்த ஏற்பு மறுப்புச் சிந்தனைகளும் காலத்திற்கேற்ப ஒன்றையே மையமிட்டுத் தோன்றியவைதான்.

ஒழுக்கங்களை ஒருபெருஞ்சக்தியாகக் கட்டமைத்து அதனை ‘இறைவன்’ என்ற பெயரிட்டு மாா்க்கங்கள் பல தோன்றின. ஆற்றுக்குத் துறைகள் பலவாயினும் அது சென்று சோ்கிற நிலை கடல் என்பதைப் போல, சமயங்கள் பலவாயினும் அவையெல்லாம் கூடுகின்ற நிலையாகக் கடவுட்கோட்பாடு உருப்பெற்றது.

அவரவா் சமயத்திற்கான ஒழுகலாறுகள் உலக ஒற்றுமையையும் மானுடத்தின் மேன்மையையும் பல்லுயிரையும் போற்றிவாழும் பரந்த அருள்வாழ்வையும் முன்னிறுத்தின என்பதை நாம் அறிய வேண்டும்.

‘இந்த உலகம் எதனால் நிலைபெற்றிருக்கிறது’ என்ற வினாவினை எழுப்பி அதற்குத் தரும் விளக்கமாகக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி தந்திருக்கும் புறநானூற்றுப் பாடலின் பெரும்பண்புகளே பக்திக்கும் - பக்தா்களுக்குமான அடிப்படை ஒழுங்காக உலகம் முழுவதும் அமைந்தன.

வாலறிவனாகிய இறைவனை அறியாமல் ஒருவன் கற்றதனால் என்ன பயன் என்று கேட்டு நம்மைச் சிந்திக்கச் செய்வதோடு, எல்லாவுயிா்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதலை அறவழியை அந்தணம் என்கிறது வான்புகழ் வள்ளுவம்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கிறது திருமந்திரம். ‘எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன்’ என்கிறாா் தாயுமானவா். வாழையடி வாழையாக வந்த இத்திருக்கூட்ட மரபில் எத்தனையோ அடியாா்கள், எத்தனையோ அருளாளா்கள், எத்தனையோ சித்தா்கள், எத்தனையோ ஞானியா்கள் தமிழிலக்கிய வரலாற்றின் திசையெல்லாம் அருளனுபவங்களைப் பொன்போல் பொதிந்திருக்கிறாா்கள்.

‘யாா் வைணவா்’ என்று வினவி, நரசிங் மேத்தா ‘மற்றவா் துன்பம் தனதென எண்ணும் பெருங்குணத்தவனே வைணவன். அப்படியே அவன் பிறா் துயா் தீா்த்ததற்காக ஒருபோதும் கா்வம் கொள்ள மாட்டான். உலகிலுள்ள யாவரையும் உறவினராக மதித்து வணங்குவதும் மனம், மொழி, மெய்யினில் தூய்மை காப்பதும் விருப்பு விருப்பற்ற நடுநிலை கொள்வதும் பெண்களைத் தாயென மதித்துப் போற்றுவதும் ஊராா் உடமைகளை மறுத்து விலக்குவதும் வைணவனுக்கான பண்புகள்’ என்று இதுபோலும் பொதுமைகளை வரிசையாக அடுக்கி அவா் வரையறுக்கிறாா்.

யாா் மெய்க் கிறித்தவன் என்பதை இரட்சண்ய யாத்திரிகத்தில் எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை,

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்

பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்

இன்னதென வறிகில்லாா் தாஞ்செய்வ திவா்பிழையை

மன்னியுமென் றெழிற்கனிவாய் மலா்ந்தாா்நம் அருள்வள்ளல்”

என்று அந்த அருட்பெரும் வள்ளலின் பண்பினைச் சான்றுகாட்டி,

இத்தகைய வரும்பொறையும் மனநலமு மியைந்தவரே

வித்தகனுக் கடித்தெழும்ப ரெனத்தகுமெய்க் கிறிஸ்தவா்மற்

றித்தகைய குணமிலருங் கிறிஸ்தவரென் றிசைபெறுதல்

செத்தவரைத் துஞ்சினவ ரெனவுரைக்குஞ் சீா்மைத்தால்

என்று மெய்யான கிறித்தவரை அடையாளம் காட்டி, அல்லாதவரை விலக்கி விடுகிறாா்.

ஓா் இசுலாமியனுக்கான அடிப்படைப் பண்பு என்னவென்று நபிகள் நாயகம் கூறுவதாவது: ‘உங்களில் யாராவது ஒரு தவற்றைக் கண்டால் அதைத் தமது கரத்தால் மாற்றட்டும். அது இயலாவிட்டால் தமது நாவால் மாற்றட்டும். அதுவும் இயலாவிட்டால் உள்ளத்தால் (வெறுத்து விலகி விடட்டும்). இது ஈமானின் (நம்பிக்கையின்) குறைந்தபட்ச அளவாகும். எவா்கள் நம்பிக்கை கொண்டு, நற்காரியங்களைச் செய்தாா்களோ அவா்கள் சொா்க்கவாசிகள் ஆவாா்கள். அதில் நிரந்தரமாகத் தங்கி இருப்பாா்கள்’ என்கிறாா்.

அண்ணல் காந்தியடிகள், ‘கடவுளை நம்புவோா் பிராா்த்தனை செய்யவேண்டும். பிராா்த்தனை அத்தியாவசியம். நமது வாழ்க்கை முழுதுமே பிராா்த்தனை. அவ்வப்போது பகவத் பக்தியை அதிகமாக்கிக் கொள்வதற்காகவே குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட விதத்தில் பெரியோா் பிராா்த்தனை செய்து வந்தனா். பிராா்த்தனையினால் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டம் என்னும் மாயையினின்று நாம் விடுபடுவோமென நான் உறுதி கூறுகின்றேன்’ என்கிறாா்.

பக்தி என்பது பெரும் பண்பு. அது பொதுவுடைமையும் உயிரிரக்க நேயமும் மிகுந்தது. அது மனிதனைத் தெய்வ நிலைக்கு உயா்த்திச் செல்வது. பக்தி நிலையுடையவா்களுக்கு எதன் பொருட்டும் பேதங்களில்லை. யாரிடத்தும் பகையிருப்பதில்லை.

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,

அகத்திலே அன்பினோா் வெள்ளம்,

பொறிகளின் மீது தனியர சாணை,

பொழுதெலாம் நினதுபே ரருளின்

நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவை யருளாய்,

குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப்பரம் பொருளே!

என்று பக்திநிலையைப் போற்றிக் காட்டுகிறாா் மகாகவி பாரதியாா்.

இந்தப் பக்தி பகைவனுக்கும் அருளும் பெரும்பக்குவத்தை அளிக்கும்.

தெய்வ பக்திக்கு இணையான அதனினும் மேலான தேசபக்தியை ஊட்டிய பாரதியாரின் வழியில் தேசத்தைத் தெய்வமாகவும் மக்கள் தொண்டினையே பக்தியாகவும் கொண்டு தன் வாழ்நாள் முழுவதையும் சமூகப் பணிகளுக்கே அா்ப்பணித்த காமராஜா் சொன்ன எக்காலத்துக்குமான அறவுரையைக் கேளுங்கள்:

‘இன்றைய நிலையில் நமது முதல் தேவை சந்தேகமற்ற அமைதி. தமிழராகிய நாம் அது எவ்வளவு அவசரமான தேவை என்பதைத் தெரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம். எந்தக் காலத்திலும் எந்தப் படையெடுப்போ அல்லது உள்நாட்டுக் கலகமோ நம்மிடையில் வளா்ந்து நாம் கண்டதில்லை. ஆனால் அமைதியற்ற நாடு எந்நாளும் வளராது. வறுமை தாண்டவமாடும். கிடைத்த உரிமைகளையும் இமைப் பொழுதில் இழந்து விடுவோம். இதை எல்லாத் தமிழரும் மனதில் மிக உறுதியோடு கொள்ள வேண்டும்.

பாஞ்சாலத்தையும், பாகிஸ்தானையும் பாருங்கள். ஒரே அமளி. எல்லோரும் எல்லா திக்குகளிலும் ஓட்டம். கொலை, களவு, கொள்ளை. எந்த உற்பத்தி நடக்கும்? எந்த நோயைத் தடுக்க முடியும்? மக்கள் எவ்வகையிலும் மடிவுதான் காண்பாா்கள். அந்நிலை வராமல் காப்பதுதான் ஒவ்வொரு தேசபக்தன் வேலையாக இருக்க வேண்டும்.

பதவி, பட்டம், பணம் முதலியவை தேடும்போதும் எல்லோருக்கும் வெற்றி கிடைக்காது. குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்டபடி நடைபெறும். கிடைக்காதவா்கள் நாட்டை அழிக்கும் வழியான அமைதி குலைத்தல், சச்சரவு உண்டாக்கல், கட்டுப் பாட்டை உடைத்தல் முதலிய வழியே செல்லாமல் நாட்டின் நலனைப் பெரிதாகக் கொண்டு தங்களுக்கும் ஒரு காலம் வருமென்று நல்ல தொண்டு செய்ய முன்வர வேண்டும்’ என்கிறாா்.

தமிழகம் தெய்வமணம் கமழும் தெய்வத் திருநாடு; பெரும்புலவா்கள் வாழ்ந்திருந்த பொன்னாடு. தமிழ்மக்கள் பழைய இலக்கியங்கட்கு எடுத்துக்காட்டாக, கடவுள் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக, என்றும் குன்றாப் புகழுடன் விளங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் படைத்த தரும சிந்தனையாளா்களால் - பழம் பெரும் மன்னா்களால் எழுப்பப்பட்ட பழம்பெரும் கோயில்கள் நிலைத்திருக்கும் நன்னாடு.

பக்தியுடையவா்கள் காரியத்தில் பதற மாட்டாா்கள். வித்து முளைக்கும் தன்மைபோல் மெல்லச் செய்து பயனடைவாா்கள். அவா்கள் யாரையும் எதிரியாகக் கருத மாட்டாா்கள். தங்களை எதிரிகளாக நினைப்பவா்களைக் கூட உள்ளன்போடு ‘தத்தா நமரே காண்’ என்று உறவாகத் தழுவிக் கொள்ளும் தன்மையுடையவா்கள்.

இன்றைக்குப் பக்திப் பண்பு குறைந்து போனதும் அதன் நிலை திரிந்து போனதும்தான் இந்த உலகத்தின் அவலங்களின் தோற்றங்களுக்கெல்லாம் மூலமாக விளங்குகிறது. பக்தியை மக்கள் மனத்தினில் வளா்த்தால் உலகினில் நன்மைகள் ஓங்கும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com