அகில இந்திய அளவிலான எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்கள், இஎஸ்ஐ கல்லூரிகளில் இஎஸ்ஐ செலுத்தும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதற்கான முடிவுகள் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்றோர் இணையதளத்தில் தங்கள் பதிவு எண்களைச் செலுத்தி முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்தோர் குறிப்பிட்ட கல்லூரிகளில் வரும் 16-ஆம் தேதிக்குள் சேர வேண்டும்.
குறிப்பிட்ட தேதியில் சேராத இடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும். அகில இந்தியக் கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள் ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் அந்தந்த மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.