2016-ஆம் ஆண்டு செப்டம்பர்- அக்டோபர் பருவத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதன்கிழமை (ஜனவரி 4) முதல் அசல், ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: தேர்வர்களுக்கு நவம்பர் 3-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு மார்ச், ஜூன் பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் செப்டம்பர்-அக்டோபர் துணைத் தேர்வுகளை எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
இதர தேர்வர்களுக்கு செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் தேர்வெழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். இந்தச் சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 4) காலை 10 மணி முதல் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.