பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில், 1,481 மாணவ, மாணவிகள் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கை பெற்றுள்ளனர். இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் 4,744 இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பி.இ. ஒற்றைச் சாளர கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், முதல் இரு தினங்கள் பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது. கலந்தாய்வில் மொத்தம் இடம் பெற்றுள்ள 1 லட்சத்து 73 ஆயிரத்து 643 பி.இ., பி.டெக். இடங்களில், தொழில் பிரிவு மாணவர்களுக்கென ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு துறையில் ஒரு இடம் வீதம் 6,225 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இப்பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களில் முதல் நாளான திங்கள்கிழமை கலந்தாய்வில் பங்கேற்க 1,102 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 869 பேர் இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கைக் கடிதம் பெற்றனர். 203 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 30 பேர் இடத்தைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை 982 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 612 பேர் இடங்களைத் தேர்வு செய்து, சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றுச் சென்றனர். 328 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கலந்தாய்வில் பங்கேற்ற 42 பேர் இடத்தைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
இயந்திரவியல் பிரிவுக்கு முன்னுரிமை: தொழில் பிரிவு மாணவர்களில் பெரும்பாலானோர் பி.இ. இயந்திரவியல் பிரிவுக்கே முன்னுரிமை அளித்துள்ளனர். இந்தப் பிரிவை 657 பேர் தேர்வு செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 204 பேர் மின்னியல் மின்னணுவியல் பிரிவையும், 187 பேர் மின்னணுவியல் தொடர்பியல் பிரிவையும், 157 பேர் கட்டுமானப் பிரிவையும், 110 பேர் கணினி அறிவியல் பிரிவையும், மற்றவர்கள் பிற பிரிவுகளையும் தேர்வு செய்துள்ளனர்.
இடங்களைத் தேர்வு செய்துள்ள 1,481 தொழில் பிரிவினரில் 45 பேர் மாணவிகள். 1,041 பேர் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.