மூன்றாண்டு (எல்எல்பி,) சட்டப் படிப்பு சேர்க்கைக்கு 53 மருத்துவர்கள் உள்பட 10,635 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இளநிலை சட்டப்படிப்பு சேர்க்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப்படிப்பு, 3 ஆண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்பு மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு ஆகியவற்றுக்கான சேர்க்கை இதுவரை நடந்து முடிந்துள்ளது.
இப்போது அரசு சட்டக்கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கான சேர்க்கை அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் கட்- ஆப் மதிப்பெண்கள், கலந்தாய்வு தேதி உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
53 மருத்துவர்கள்: இந்த 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு 53 மருத்துவர்கள், 1,364 பி.இ., பட்டதாரிகள், 8,654 இளநிலை பட்டதாரிகள் உள்பட 10,635 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். கடந்த 2016-17 ஆம் கல்வியாண்டில் 6,500 பேர் மட்டுமே இந்த 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.