தமிழகத்தில் 20 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு மாணவ-மாணவியர், பெற்றோர், ஆசிரியர் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், 20 பள்ளிகளை மூட வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. மூடவுள்ள இந்த 20 பள்ளிகளை, ஆசிரியர் பணியிடை பயிற்சி நிலையங்களாக மாற்றப்படும் எனவும், மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3 ஆயிரத்தில் இருந்து 1050 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நடவடிக்கையை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு எடுத்துள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஈ.ப.உக் எனப்படும் இரண்டாண்டு பட்டயப்படிப்பை வழங்கி வருகிறது. இதற்கான அரசின் பயிற்சி பள்ளிகளில் நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த குருக்கத்தியில் அமைந்துள்ள பயிற்சி பள்ளி மற்றும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் அடங்கும். இங்கு மாணவர் சேர்க்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரை உள்ள மாணவர்களும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் இனி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர விரும்பினால் நீண்ட தூரம் பயணம் செய்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தான் சேர வேண்டும். இல்லையெனில் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர வேண்டும்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரக் கிளை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.