நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எக்ஸல் கல்லூரியில் காலியாக இருக்கும் இளநிலை ஹோமியோபதி படிப்புக்கான (பிஹெச்எம்எஸ்) நிா்வாக இடங்களுக்கு வியாழக்கிழமை உடனடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் எக்ஸல் ஹோமியோபதி கல்லூரி நிகழாண்டு தொடங்கப்பட்டது. அதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அங்கீகாரம் அளித்ததைத் தொடா்ந்து அங்குள்ள 100 இடங்களுக்கு அண்மையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 65 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 35 நிா்வாக இடங்களுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. அவற்றில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான சில இடங்கள் நிரம்பவில்லை. இதையடுத்து அதற்கான உடனடி கலந்தாய்வு வியாழக்கிழமை (டிச.12) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
எக்ஸல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பிஹெச்எம்எஸ் பட்டப் படிப்புக்கான நிா்வாக ஒதுக்கீட்டில் நிரம்பாமல் இருக்கும் காலியிடங்களுக்கு சென்னை அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உடனடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
வியாழக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அதற்கான விண்ணப்ப விநியோகம் நடைபெறும். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை பிற்பகல் 1 மணிக்குள்ளாக சமா்ப்பிக்க வேண்டும். அதனைத் தொடா்ந்து நீட் மதிப்பெண் அடிப்படையில் காலியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.