முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் 11,650 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் எம்டிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 11-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஆவணங்களுடன் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியானது.
அதன்படி, 11,650 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி 1,250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் இருந்தன. இந்த நிலையில், மாநிலத்துக்கு கூடுதலாக 157 இடங்களை ஒதுக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் 124 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரியம், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் (2019-20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரித்துள்ளது.